டாக் ஷோ நடத்துறீங்களா... இல்ல, ஆபாசப்படம் காட்டுறீங்களா?: ஆவேசத்தில் மமதா
கொல்கத்தா: தற்போது சில டிவிகளில் நடத்தப்பட்டு வரும் டாக் ஷோக்களைப் பார்க்கும்போது அவற்றுக்கும், ஆபாசப் படங்களுக்கும் வித்தியாசமே தெரியவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தி்ல தொடர்ந்து கற்பழிப்புகளும், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்தபடி உள்ளன. இதனால் முதல்வர் மமதா பானர்ஜிக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.
மக்களும், பல்வேறு தரப்பினரும் மமதா மீது அதிருப்தியைக் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சிந்தனையாளர்கள் மமதாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் அவர்கள் மீது காட்டமாக இருக்கிறார் மமதா.
சிந்தனையாளர் பேரணி...
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து கொல்கத்தாவில் சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் பேரணி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சிந்தனையாளர்கள் மீதும், அறிவுஜீவிகள் மீதும் பாய்ந்துள்ளார் மமதா.
ஆபாசப் படங்களுடன் ஒப்பிட வேண்டும்...
இதுகுறித்து அவர் கூறுகையில், சில டிவி சானல்கள் மிகவும் மோசமான முறையில் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. அவற்றை ஆபாசப் படங்களுடன்தான் ஒப்பிட வேண்டும்.
நடுவர்கள் ஒழுங்கா...
மேலும் டாக் ஷோ போன்றவற்றில் பங்கேற்கும் நடுவர்கள் ஆபாசப் படங்களுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். ஆனால் இவர்கள் கற்பழிப்பு குறித்து சாடுகிறார்கள்.
டிவி டாக் ஷோக்கள் ரொம்ப மோசம்...
பாலியல் ரீதியான குற்றங்களைத் தூண்டும் வகையில்தான் டிவி டாக் ஷோக்கள் உள்ளன. இவை பெண்களுக்கு அவமானத்தையே கொண்டு வருகின்றன. 2- 3 சானல்கள்தான் இப்படிச் செய்கின்றன. கற்ழிப்புகள் குறித்து அவர்கள் இஷ்டத்திற்கு எதையாவது பேசுகிறார்கள்.
சமூக அக்கறை இல்லை...
குழந்தைகளும் இதைப் பார்ப்பார்களே என்ற உணர்வு அவர்களுக்கு இல்லை. கற்பழிப்பு குறித்து மிகவும் சுவாரசியமாக இந்த நடுவர்களும் பேசுகிறார்கள். சமூகத்திற்காக இவர்கள் பணியாற்றுவதில்லை. மாறாக பணத்துக்காக பேசுகிறார்கள்.
பதிலடி...
திரைப்பட இயக்குநர் அபர்ணா சென் உள்ளிட்ட பல்துறைப் பிரமுகர்களும் மமதா பானர்ஜி ஆட்சியில் கற்பழிப்புகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டதாக சாடியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications