கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாக ஜெயலலிதா சொன்னார், ஆனால்,...!!

ஆந்திராவுக்கு போகலை...
* தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததால் தமிழகத்தில் இருந்த கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவுக்கு தப்பி ஓடிவிட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம் தெரிவித்திருந்தார்.
வட இந்திய கொள்ளையர்களும் இங்கே வந்துட்டாங்க...
ஆனால், வட இந்திய கொள்ளையர்கள் அனைவரும் தமிழகத்திற்குள் வந்து விட்டார்களோ என்று அஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமடைந்துவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,000க்கும் மேற்பட்ட கொலைகளும், 40,000க்கும் மேற்பட்ட கொள்ளை- திருட்டு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதைத் தடுத்து, சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டிய ஜெயலலிதா, அதைச் செய்யாமல், பாமகவினரை பொய் வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பொது மக்கள் தெருக்களில் நடமாடுவதற்கே அஞ்சுகின்றனர்...
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தடையின்றி தொடர்வதால் பொது மக்கள் தெருக்களில் நடமாடுவதற்கே அஞ்சுகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பழி தீர்ப்பதிலேயே தீவிரம் காட்டும் தமிழக அரசு, சீரழிந்து கிடக்கும் சட்டம்- ஒழுங்கு சரி செய்யாதததை பாட்டாளி மக்கள் கட்சி கண்டிக்கிறது.
மீனவர் பிரச்சனை.. முதல்வர் கடிதம் எழுதிட்டா மட்டும் போதுமா?:
வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக தொடரும் சிங்களப் படையினரின் தாக்குதலில் 600க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்காக சிங்களப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தான் அவர்கள் தமிழக மீனவர்கள் மீது துணிச்சலாக தாக்குதல் நடத்துகின்றனர்; இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை சட்டவிரோதமாக கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.
இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக முதலமைச்சரோ, இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார். இந்த அணுகுமுறை பயனளிக்காது. எனவே, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும், இலங்கப் படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியும் மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத்தர எடுக்கவேண்டும்.
ராஜபக்சே முயற்சிகளை முறியடிக்க வேண்டும்:
இலங்கையில் போர் முடிவடைந்த 3 மாதங்களில் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்திருந்தார். ஆனால், போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட போதிலும் அதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக தமிழர்கள் வாழும் பகுதிகளை சிங்கள மயமாக்குதல், தமிழர்களுக்கென உள்ள ஓரிரு அதிகாரங்களையும் பறித்தல் போன்ற செயல்களில் தான் இலங்கை அரசு ஈடுபட்டுவருகிறது. இதன் அடுத்தகட்டமாக ஈழத் தமிழர்களுக்கு பெயரளவிலாவது அதிகாரம் வழங்கும் நோக்குடன், 1987ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13வது அரசியல் சட்டத் திருத்தத்தையே ரத்து செய்ய அதிபர் ராஜபக்சே திட்டமிட்டிருக்கிறார். இதற்கான 19வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை ராஜபக்சே அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உருமயக் கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
13வது அரசியல் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட்டால் இது இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமரியாதையாக அமையும். எனவே, இந்த முயற்சியை தடுத்து நிறுத்துவதுடன், இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழீழம் தான் நிரந்தரத் தீர்வு என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications