Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்.எல்.சி. பங்குகள் விற்பனையை ரத்து செய்க...: கருணாநிதி வலியுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், 26-5-2013 அன்று நான் எழுதிய உடன்பிறப்பு மடலில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 23-5-2013 அன்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் தனது பங்குகளை மத்திய அரசு மேலும் 5 சதவிகிதம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருப்பதாக அறிவதாகவும், அந்த முயற்சி விரும்பத் தக்கதல்ல என்றும், எனவே என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக மாற்று வழிமுறைகளை ஆராயுமாறு கேட்டுக் கொள்வதாகவும் எழுதியிருப்பதைச் சுட்டிக் காட்டியதோடு 24-5-2013 அன்று மத்திய அமைச்சர், நண்பர் நாராயணசாமி என்.எல்.சி. பங்குகளை விற்பதில் தவறு ஒன்றுமில்லை என்பதைப் போலக் கருத்து தெரிவித்திருந்ததையும் எடுத்துக்காட்டி, புதுவை உட்பட தமிழகத்திற்கும் குறிப்பாக தொழிலாளர்களுக்கும் விரோதமான இந்தக் கருத்து தி.மு.க.வுக்கு ஏற்புடைய கருத்து அல்ல என்று தெரிவித்திருந்தேன்.

முரசொலி மாறன் மத்திய அரசின் தொழில் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த போது எடுத்துக் கொண்ட பெருமுயற்சியின் காரணமாக நவரத்னா என்ற தகுதி பெற்ற என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு மீண்டும் ஈடுபடக்கூடாது, அது தேவையின்றி தமிழர்களை குறிப்பாக நெய்வேலி தொழிலாளர்களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல், அப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு மேலும் ஒரு எதிர்ப்பைத் தேடிக் கொள்ள வேண்டாமென்று எச்சரிக்க விரும்புகிறேன் என்றும் அதில் விளக்கியிருந்தேன்.

தி.மு.க ஆட்சியிலே இருந்த போதும் 22-6-2006 அன்று நெய்வேலி பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது. உடனடியாக நான் 25-6-2006 அன்று இந்தப் பிரச்சினை குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், நெய்வேலியில் பத்து சதவிகிதப் பங்கினை விட்டுத் தருவது பற்றி, தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்க் கருத்துக்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தி விடக் கூடாது. ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தபட்சத் திட்டத்தில் இருந்து விலகிச் செல்வதற்கு; எந்தக் காரணம் கூறப்பட்டாலும், அது முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையைக் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டிலிருந்து தளர்வதாகவே கருதப்படும். எனவே மத்திய அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்திட வேண்டுகிறேன்" என்று கேட்டுக் கொண்டிருந்தேன். 2004ஆம் ஆண்டு ஐ.மு.கூட்டணி சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குறைந்த பட்சத் திட்டத்தில், "இலாபகரமாக இயங்கும், அரசுத் துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது; நவரத்தினங்களாக விளங்கும் அரசு நிறுவனங்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.

2006ஆம் ஆண்டில் நான் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்குப் பின்னர் நெய்வேலி நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகளை விற்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தையும் திரும்பப் பெற்றனர். தற்போது நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்று தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்தும், நான் எழுதிய உடன்பிறப்பு மடலுக்குப் பிறகும், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்ய முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க தலைவர் கருணாநிதி உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பை மத்திய அரசு அறிந்துள்ளது. இது சம்பந்தமாக அமைச்சரவை கூட்டத்தில் தான் முடிவெடுக்க முடியும். எனவே மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கும்போது என்.எல்.சி. பங்குகள் விற்பனைக்கு தமிழகத்தின் எதிர்ப்பு பற்றியும் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறி, அது நாளேடுகளில் 28-5-2013 அன்று வெளி வந்திருக்கின்றது.

ஆனால் 21-6-2013 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் என்.எல்.சி. யின் ஐந்து சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. அந்தச் செய்தி வந்தவுடனேயே அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்து, தங்களது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் காட்டுகின்ற வகையில் போராட்டங்களில் இறங்க ஆயத்தப் பணிகளிலே ஈடுபட்டுள்ளார்கள். அந்த நிறுவனத்தில் உள்ள தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் பொதுச் செயலாளரும், மாநிலப் பேரவை துணைத் தலைவருமான சா. இராசவன்னியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து ஆண்டு தோறும் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் இலாபத்தில் இயங்கி வருகின்றது. கடந்த காலங்களில் 1996 முதல் மத்திய அரசு இதன் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்ட போதெல்லாம் தொ.மு. சங்கப் பேரவை கடுமையான போராட்டங்களை நடத்தியிருக்கிறது.

இந்த நிறுவனம் பொதுத் துறை நிறுவனமாக இருப்பதால், அந்த மாவட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. தனியாரிடம் விற்பனை செய்தால் மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என்றெல்லாம் விரிவாகச் சொல்லியிருக்கிறார். மத்திய அரசு தனது 5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலமாக 466 கோடி ரூபாய் தான் மத்திய அரசுக்கு கிடைக்கக் கூடுமென்று தெரிகிறது. மத்திய அரசுக்கு இது ஒரு பெரும் தொகையல்ல. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தது 10 சதவிகிதம் பொதுமக்களிடம் இருக்க வேண்டும் என்ற இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நிபந்தனை விதித்திருப்பதின் அடிப்படையிலே தான் இந்த முடிவு எடுக்கப்படுவதாக மத்திய அரசு கூறக்கூடும். ஆனால் இந்தக் கட்டுப்பாட்டில் இருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு விலக்களிக்க பங்கு ஒப்பந்த விதிகள் சட்டத்திலே திருத்தம் கொண்டு வரலாம், அல்லது என்.எல்.சி நிறுவனத்தையே பங்குகள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்களின் பட்டியலிலே இருந்து நீக்கி விடலாம் என்று தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு ஏற்கனவே எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதையும் மத்திய அரசு கருத்திலே கொண்டும், ஏற்கனவே இதுபோல நெய்வேலி
நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு பின்னர் தமிழகத்தின் வேண்டுகோளையேற்று அந்த முடிவினை தள்ளி வைத்ததை மனதிலே கொண்டும், தற்போது மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவினை ரத்து செய்ய வேண்டுமென்று திமுகவின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் என்.எல்.சி. பங்குகளை விற்க கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+