காதல் ரசம் சொட்டச் சொட்ட 14 லட்சம் மணித்துளிகள்.. கண்ணீரில் எஸ்.ஐ. உமா மகேஸ்வரி!
கோவை: நானும் அவரும் காதல் ரசம் சொட்டச்சொட்ட 14 லட்சம் மணித்துளிகள் பேசியுள்ளோம். என் நினைவாகவே அவர் இருப்பதுபோல காட்டிக்கொள்ள 8 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.களை எனக்கு அனுப்பியிருக்கிறார். இந்த சமயத்தில்தான் அவருக்கு மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு கிடைத்தது. என்னை விட்டு விலக ஆரம்பித்தார் என்று பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி கண்ணீருடன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகேஉள்ள ஊஞ்சம்பாளையத்தைச் சேர்ந்தவரான மாஜிஸ்திரேட் தங்கராஜ், இளம் பெண் சப் இன்ஸ்பெக்டரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, குடும்பமும் நடத்தி விட்டு மோசடி செய்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சப் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தனது நிலை குறித்தும், தங்கராஜிடம் தான் கொண்ட காதல், ஏமாந்த விதம் குறித்து கண்ணீருடன் விவரித்துள்ளார் உமா மகேஸ்வரி...

உயர்வே லட்சியம்
பொள்ளாச்சி எனது சொந்த ஊர். எனது பெற்றோர் கூலி தொழிலாளர்கள். இருப்பினும் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற நோக்கத்தோடு கஷ்டப்பட்டு கடந்த 2005-ம் ஆண்டு போலீஸ் வேலைக்கு சேர்ந்தேன். உயர்வே லட்சியமாக இருந்ததால் 2011-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்.

குமரியில் பணியாற்றியபோது
அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினேன். அந்த சமயத்தில் ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள ஊஞ்சம்பாளையத்தை சேர்ந்த வக்கீல் தங்கராஜ் ஒரு வழக்கு விஷயமாக கன்னியாகுமரி வந்தார். அப்போது நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டோம். அதன் காரணமாக எங்களிடையே காதல் மலர்ந்தது.

உயிருக்குயிராய்....
அவர் என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். அதன்பேரில் அவருடன் நெருங்கி பழகினேன். என்னை உயிருக்குயிராய் காதலிப்பதாக கூறினார். செல்போனில் மணிக்கணக்கில் என்னுடன் பேசுவார். நம்மை திருமணம் செய்து கொள்ளப்போகிறவர்தானே என்ற நினைப்பில் அவரிடம் எனது ஆசைக் கனவுகளை பகிர்ந்து கொண்டேன்.

காதல் ரசம் சொட்டச் சொட்ட
நானும் அவரும் காதல் ரசம் சொட்டச்சொட்ட 14 லட்சம் மணித்துளிகள் பேசியுள்ளோம். என் நினைவாகவே அவர் இருப்பதுபோல காட்டிக்கொள்ள 8 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.க்களை எனக்கு அனுப்பியிருக்கிறார். இந்த சமயத்தில்தான் அவருக்கு மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு கிடைத்தது.

பேசுவது குறைந்தது
பதவி உயர்வு கிடைத்த பின்னர் என்னுடன் செல்போனில் பேசுவதை குறைத்துக் கொண்டார். வேலைப்பளு காரணமாக இருக்கலாம் என நினைத்து நானும் அதை பெரிதுபடுத்தவில்லை. இந்த நிலையில்தான் அவர் கடந்த 20-ந் தேதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் என்னை பேரிடியாய் தாக்கியது.

லட்சியமெல்லாம் போச்சே...
சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் நான் ஐ.பி.எஸ் ஆகவேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்தேன். காதல் விவகாரத்தால் என் ஆசை கனவுகள் எல்லாம் தகர்ந்து விட்டது.

நயவஞ்சகன்
என்னை நயவஞ்சகமாக ஏமாற்றி விட்டு மற்றொரு பெண்ணை பதிவு திருமணம் செய்துகொண்ட தங்கராஜூக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் போலீசில் புகார் செய்தேன். தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். சட்டம் அவருக்கு உரிய தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று குமுறியுள்ளார் உமா மகேஸ்வரி.












Click it and Unblock the Notifications