கவிஞர்கள் காசி ஆனந்தன், இந்திரனுக்கு கவிஞர் சிற்பி இலக்கிய விருது
கோவை: 2013ம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி இலக்கிய விருதுக்கு கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் கவிஞர் இந்திரன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் உள்ள கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த தமிழ் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. இந்நிலையில் 2013ம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி இலக்கிய விருதுக்கு ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் இந்திரன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு இந்த விருதுடன், ரூ.20,000 பரிசுத் தொகையும் நினைவுக் கேடயமும் வழங்கப்படும். மேலும், சமூகப் பணியாளர் ஓசை காளிதாஸுக்கு சமூக நற்பணிக்காக பொ.மா.சுப்பிரமணியம் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் ஆகஸ்ட் 11ம் தேதி பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி விவேகானந்தர் அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவுக்கு கோயம்புத்தூர் பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை ஏற்று, விருதினை வழங்க உள்ளார். காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசுகிறார்.