ஒருதலைக் காதல் விபரீதம்… கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசி, கத்தியால் குத்தி கொலை செய்த மாணவன் கைது
ராஜஸ்தான்: ராஜஸ்தானில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசி, பின்னர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர். கல்லூரி வளாகத்தில் நடந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகானர் நகரில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் தினேஷ் சங்லா. அவரது வகுப்பில் படித்து வரும் மீனு சவுத்ரி என்ற பெண்ணை பல நாட்களாக சங்லா ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
மீனு சவுத்ரியிடம் தனது காதலை பலமுறை வெளிப்படுத்தியும், சங்லாவின் காதலை ஏற்க அவர் மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்லா அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
சம்பவத்தன்று மீனு சவுத்ரி தங்கி இருந்த பெண்கள் விடுதிக்கு பெண் போல் உடை அணிந்து, அலங்கரித்து கொண்டு வந்திருக்கிறார்.
மீனு சவுத்ரியின் அறைக்குச் சென்று பேசிக் கொண்டிருந்த போதே திடீரென தான் கொண்டு வந்த ஆசிட்டை ஊற்றி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த மீனு சவுத்ரி தப்பி ஓட முயன்ற சங்லாவை பிடித்திருக்கிறார். இதனால் பயந்து போன சங்லா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மீனுவை வெறி கொண்டு குத்தியும் இருக்கிறார்.
இதில் தடுமாறி கீழே விழுந்தார் மீனு சவுத்ரி. ரத்த வெள்ளத்தில் கிடந்த மீனு சவுத்ரியை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று பயந்த சங்லா, தனது கை நரம்புகளை தானே அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மீனு சவுத்ரி இறந்ததையடுத்து, சங்லாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.