உ.பி.: 4 வயது சிறுமி கற்பழித்து கொலை- உடலில் 50 இடங்களில் கத்திகுத்து
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 4 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 50 முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரைச் சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை காலை காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடலை தெருநாய்கள் சூழ்ந்து நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் உடலில் 50 தடவை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. மேலும் அவர் கற்பழித்துக் கொல்லப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தனது மகளை யாரோ கடத்தி கற்பழித்து கொன்றுவிட்டனர் என்று சிறுமியின் விதவை தாய் தெரிவித்துள்ளார். முன்னதாக போலீசார் சிறுமி கொலை செய்யப்பட்டவில்லை என்றும் அவரை தெரு நாய்கள் கடித்து குதறியதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.