தனுஷ்கோடி, விஜயநகரம்.. பேய் நகரமாக வர்ணிக்கப்பட்ட ‘கைவிடப்பட்ட’ இந்திய நகரங்கள்!
சென்னை: உத்தர்காண்ட் பெருவெள்ளத்தில் பேய் நகரமாக வர்ணிக்கப்பட்டு கைவிடப்பட்ட இடமாகப் போய்விட்டது புனித தலமான கேதார்நாத். கேதார்நாத்துக்கான புனித யாத்திரை இன்னும் எத்தனை ஆண்டுகாலத்துக்குப் பிறகு தொடங்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாத ஒரு நிலை உள்ளது.
வரலாறு நெடுகிலும் ஏராளமான கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் இருக்கின்றன. மனிதர்கள் யாருமே வாழாமல் கைவிடப்பட்ட இத்தகைய நகரங்களைத்தான் ‘பேய் நகரம்- ghost town' என்று அழைக்கின்றனர். நமது இந்தியாவில் இப்படி சில பேய் நகரங்கள் என்ற கைவிடப்பட்ட நகரங்கள் இருக்கின்றன.

தனுஷ்கோடி
தமிழகத்தில் புகழ்பெற்று திகழ்ந்த நகரம் தனுஷ்கோடி. 1964ஆம் ஆண்டு வீசிய பெரும்புயலில் இந்த நகரமே ஒட்டுமொத்தமாக சிதையுண்டு போய் ‘கைவிடப்பட்ட பேய் நகராகி'ப் போனது. இந்த புயலில் 100 பேருடன் பயணித்த ரயில் ஒன்றும் அப்படியே மூழ்கிப் போனது. தனுஷ்கோடியில் இடிந்த கட்டிடங்களே அதன் எச்சங்களாக இருக்கின்றன.

லக்பதக்
குஜராத் மாநிலத்தில் கட்ச் பிரதேசத்தில் இருக்கிறது லக்பதக். லக்பதக் கோட்டை வழியாகத்தான் ஒருகாலத்தில் இந்தியாவுக்கான வர்த்தகமே நடைபெற்று வந்தது. 1816ஆம் ஆண்டு கட்ச் பிராந்தியத்தில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கம் அந்த நகரையே உருக்குலைந்தது. அதுநாள் வரை லக்பதக் வழியே பாய்ந்தோடி வந்த சிந்து நதியின் திசையே இடம்மாறிப் போனது. இன்றளவும் சிந்துநதி பாய்ந்தோடியதன் தடமாக பெருமணல் பரப்பு இருப்பதை அங்கே காண முடியும்

பதேபூர் சிக்ரி
முகலாய அரசர்களின் தலைநகராக இருந்தது பதேபூர் சிக்ரி. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இருக்கிறது இது. தற்போது கைவிடப்பட்ட நகரமாக இருந்தாலும் முகலாயர்களின் பெருமையை பறைசாற்றும் சுற்றுலா தலமாக யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக இருந்து வருகிறது.

மாண்டு என்ற மாண்டவ்
மத்திய பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் இருக்கிறது இது. கி.பி. 555ஆம் ஆண்டை சேர்ந்த நகரம் இது. மால்வா பிரதேசத்தை ஆண்ட ராஜ்புத்திர அரசர்களின் வரலாற்றை விவரிக்கும் இடமாக இருக்கிறது. இதுவும் கைவிடப்பட்ட நகரமே.

பழைய கோவா
17ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்களின் மிக முக்கிய நகரமாக திகழ்ந்து வந்தது. 17வது நூற்றாண்டில் மலேரியா, காலரா போன்ற கொள்ளை நோய் காவு வாங்க இந்த நகரமே கைவிடப்பட்டது

ரோஸ் ஐலேண்ட்
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒன்று இது. 1941ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கத்தில் இத்தீவில் வசித்தோர் மாயமாகிப் போய்விட கைவிடப்பட்ட நகரமாகிப் போனது.

விஜயநகரம்
1500ஆம் ஆண்டில் உலகில் 2வது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாக இருந்தது விஜயநகரம். கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டத்தில் இருக்கிறது. ஏராளமான விஜயநகரப் பேரரசர்காலத்து ஆலயங்கள், குகைக் கோயில்கள் என ஒரு பாரம்பரிய சின்னமாக, சுற்றுலா தலமாக இப்போது உருமாறிக் கிடக்கிறது.

கேதார்நாத்
இந்த வரிசையில் இப்போது இணைந்திருக்கிறது உத்தர்காண்ட் மாநிலத்தின் கேதார்நாத். அண்மையில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் எங்கெங்கு காணினும் மனித உடல்களாக காட்சி தரும் பேரவலத்தை எதிர்கொண்டிருக்கிறது புனித தலமான கேதார்நாத்.












Click it and Unblock the Notifications