உத்தர்கண்டில் மீண்டும் பெருமழை - பல இடங்களில் நிலச்சரிவு.. 6 பேர் பலி!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமோலி மாவட்டத்தில் 6 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60 குடும்பங்களைச் சேர்ந்தோர், மாவட்ட ஆட்சியர் வி.சண்முகத்தின் உத்தரவின் பேரில் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனிடையே, உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேடாலி மனேரி மார்க் பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
இதிலிருந்து மாநில முன்னாள் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் நூலிழையில் உயிர் தப்பினார். சமீபத்திய இயற்கைச் சீற்றத்தால் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிடச் சென்றபோது இச்சம்பவம் ஏற்பட்டது.
மலைப் பகுதிகளில் உள்ள சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனை மறுசீரமைக்க ரூ. 300 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சாலைகள் அமைப்பதற்குத் தேவையான நிலங்கள் சுமார் 5 ஹெக்டேர் வரை துரிதமாக ஒதுக்கீடு செய்ய மத்திய சுற்றுசூழல் பாதுகாப்பு அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அனுமதி அளித்தார்.
மழைக்கு 6 பேர் சாவு
உத்தர்கண்டில் இரண்டாவது முறையாகப் பெய்த பெருமழைக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாநிலத்தில் புதன்கிழமை பெய்த மழைக்கு 4 பேர் உயிரிழந்தனர். பிலிபித் பகுதியில் 3 பேரும், சீதாபூர் பகுதியில் ஒருவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.