ஜெயலலிதாவை பிரதமராக தீர்மானிக்கும் சக்தி பாசறை தான்: அமைச்சர் வைகைச் செல்வன்

கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் சி.எஸ்.ஐ பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான வைகைச் செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது,
அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு என்று தனி வரலாறு உண்டு. அன்று அண்ணாவின் பின்னால் வழி நடந்து அழகு சேர்த்த இளைஞர்கள் பின்பு எம்.ஜி.ஆரின் அருமை பண்பு, அரவணைப்பால் வலுப்பெற்றனர். மேலும், அன்று உருவான எம்.ஜி.ஆர். மன்றத்தை பார்த்து படத்திற்கு விசிலடித்தான் குஞ்சுகள் என கருணாநிதி கிண்டலடித்தார். ஆனால் 14 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். இறக்கும் வரை எதிரிகளை துரத்தி துரத்தி அடித்தார்.
அதன் பிறகு அதிமுகவை ஜெயலலிதா தான் வழி காட்டி நடத்தி செல்ல முடியும் என்ற நிலை உருவானது. அப்போது ஜெயலலிதா பேரவை உருவானது. இப்போது அதாவது 2008ம் வருடம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உருவானது. அதன்படி பார்த்தால் இன்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு வயது 6 ஆகும்.
பாசறை துவக்கப்பட்ட போது வீதி வீதியாக சென்று ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பது போல் 40 லட்சம் பாசறை உறுப்பினர்களை சேர்த்தன் மூலம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
தற்பொழுது முதல்வர் ஜெயலலிதா மூன்று கட்டளைகளை இட்டுள்ளார். மூன்று மாதத்திற்குள் பாசறையில் 25,000 புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வது, ஒரு பாசறை உறுப்பினர் மூன்று பேரையாவது உறுப்பினராக இணைக்க வேண்டும் என்று கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. முதல்வர் ஜெயலலிதா பிரதமராவதும் உறுதி. எனவே முதல்வரை பிரதமராக தீர்மானிக்கும் சக்தி பாசறை உறுப்பினர்களுக்கு தான் உள்ளது. ஆகவே அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டு நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, பாசறை மாநில இணை செயலாளர் ராஜலட்சுமி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. காமராஜ், அவைத் தலைவர் பாப்பாசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications