சோலார் பேனல் ஊழல்- மலையாள நடிகர்களையும் விசாரிக்க போலீஸ் முடிவு
கொச்சி: கேரள சோலார் பேனல் கருவிகள் வழங்கியதில் நடந்த முறைகேடுகளில் கைது செய்யப்பட்டுள்ள சரிதா நாயருக்கு முன்னணி மலையாள நடிகர் நடிகைகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால், நடிகர் நடிகைளிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் அமைத்து தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது 2-வது மனைவி சரிதா நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிமன்ற விசாரணையின்போது சரிதாநாயர் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்கு மூலமும் அளித்தார்.
அதில் சோலார் பேனல் கம்பெனியை தொடர்ந்து நடந்த முடியாததால் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும், சோலார் பேனல் கருவி அமைத்து தருவதாக தான் பணம் பெற்றது உண்மைதான் என்றும் ஒப்புக் கொண்டார்.
மேலும் நிர்வாக பிரச்சினை காரணமாக கம்பெனியை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே சோலார் பேனல் கருவி பொருத்துவதாகக் கூறி பணம் பெற்றவர்களிடம் திட்டமிட்டப்படி அந்த கருவிகளை பொருத்தி கொடுக்க முடியவில்லை என்றும் சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சரிதாநாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 12 வழக்குகளில் விசாரணை நடந்துள்ளது.
எனவே இந்த வழக்குகளில் விரைவில் போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
முதல்வர் உம்மன் சாண்டியின் அலுவலகத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் உள்ளனர் என்று கூறி அவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் ஆதாரமாக காட்டி ஸ்ரீதரன் நாயர் என்பவரைக் கவிழ்த்துள்ளார் சரிதா.
மேலும் தனது நிறுவனத்தின் புரமோஷனுக்காக முன்னணி மலையாள நடிகர் நடிகைகளை சரிதா பயன்படுத்தியுள்ளார். நிறுவனத்தின் தொடக்க விழாக்களுக்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகளை இந்த நடிகர் - நடிகைகளை வைத்து நடத்தியுள்ளார்.
முன்னணி நடிகர், நடிகைகள், டி.வி. நடிகர், நடிகைகளுடன் சரிதா நாயர் எடுத்துக் கொண்ட ஏராளமான புகைப்படங்களையும் சரிதா வீட்டிலிருந்து எடுத்துள்ளனர்.
இந்த நடிகர் நடிகைகளை வைத்து முதல்வர் அலுவலக அதிகாரிகளிடம் சரிதா நாயர் காரியம் சாதித்தாரா... இந்த மோசடியில் நடிகைகளின் பங்கு என்ன, எவ்வளவு பணம் கைமாறியது என்றெல்லாம் விசாரிக்கின்றனர் போலீசார்.
ஏற்கெனவே இந்த வழக்கில் பிரபல நடிகை ஷாலு மேனன் கைதாகியுள்ள நிலையில், இப்போது போலீசார் விசாரணை தீவிரமாக்கியுள்ளது கேரள திரைத்துறையினருக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications