வடமாநிலங்களில் கன மழை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உள்பட 2 ரயில்கள் தாமதம்
சென்னை: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட இரண்டு ரயில்கள் தாமதமாக வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் கன மழை பெய்து வருகிறது. மும்பையில் மக்கள் வெளியில் நடமாடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வர்தாவில் வெள்ளம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதில் வார்தா மாவட்டத்தில் ரயில்பாதைகள் முற்றிலும் மூழ்கியுள்ளன. நாக்பூர் - வார்தா இடையே ரயில்பாதைகள் தண்ணீரில் சூழப்பட்டுள்ளதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவது சிலமணிநேரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தாமதமாக வரும் ரயில்கள்
இதனால் வடமாநிலங்களில் இருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் பல மணிநேரம் தாமதமாக வந்துகொண்டிருக்கின்றன.

ஜிடி எக்ஸ்பிரஸ் 6 மணி நேரம் லேட்
டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு காலை 6.20 மணிக்கு வந்து சேரும் ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 6 மணி நேரம் தாமதமாக வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடும் தாமதமாக வருகிறது
சென்னைக்கு காலை 7.15 மணிக்கு வந்து சேர வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமாக வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சங்கமித்ரா நான்கு நாட்களாக பாதிப்பு
பாட்னா - பெங்களூர் இடையே இயக்கப்படும் சங்கமித்ரா ரயில் கடந்த 4 நாட்களாக இயக்கப்படாமல் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

மதுரை -டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலும் லேட்
அதேபோல், இரவு 11 மணிக்கு மதுரையில் இருந்து டேராடூன் செல்ல இருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10 மணிக்கு புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்களின் தாமதம் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications