பாக். சோகம் ..ரம்ஜான் வாழ்த்து பரிமாறிய போது திடீர் துப்பாக்கிச் சூடு- 9 பேர் பலி
குவெட்டா: பாகிஸ்தானில் மசூதியில் இருந்து வெளியே வந்து ரம்ஜான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நேற்று முன்தினம் போலீசார் ஒருவரது இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 38 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள்.
இந்த அதிர்ச்சியில் இருந்து அந்த நகரம் மீள்வதற்குள் நேற்று மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குவெட்டா புறநகரில் சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் மசூதியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று நடைபெற்றது. இந்த தொழுகை முடிந்த பின்னர் மசூதியை விட்டு வெளியே வந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10 பேர் படுகாயமடைந்தனர்.
மசூதியை விட்டு வெளியே வந்தவர்களில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் மாகாண அமைச்சர் அலி மதாத் ஜடாக்கும் ஒருவர். அவரது காரிலும் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்திருந்தாலும் காயமின்றி உயிர் தப்பியிருக்கிறார். அனேகமாக ஜடாக்கை இலக்கு வைத்துதான் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications