தேமுதிகவை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் முயற்சி: இல.கணேசன் குற்றச்சாட்டு

அனைத்து மத மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி நீலகிரி மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மதவாத சக்திகள் ஆட்சி அமைக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வருகிறார். ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமுதாய மாணவ, மாணவியருக்கு மட்டும் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் காங்கிரஸ் அரசு மதரீதியான பிரிவினையை தூண்டி வருகிறது என்பது தெளிவாக தெரிய வருகின்றது.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் பட்சத்தில், அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை பாராபட்சம் இன்றி வழங்கப்படும். நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தேச விரோத சக்திகளை நரேந்திர மோடி பிரதமராகும் போது நிச்சயம் முறியடிப்பார்.
பாஜக பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் கட்சி அல்ல. ஆனால் ஆங்காங்கே நடக்கும் குண்டு வெடிப்பு, கொலை போன்ற சம்பவங்களை அரசியலாக்கி, மக்களின் செல்வாக்கை பெற காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் முயற்சி செய்கின்றன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பூத் கமிட்டிகள் முழு வீச்சில் அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் பாஜக எதிர்க்கிறது. ஆனால் நல்ல கொள்கையுடய தேமுதிகவை நாங்கள் வரவேற்கிறோம். தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியதன் மூலம் தேமுதிகவை காங்கிரஸ் தனது பக்கம் இழுக்க முயற்சி செய்கின்றது என்றார்.












Click it and Unblock the Notifications