மோடியை பிரதமராக ஏற்க முடியாது: மு.லீக் காதர் மொய்தீன்
தூத்துக்குடி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமராக ஒருபோதும் ஏற்க முடியாது என்று முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காதர்மொய்தீன், 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து 600க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. 2,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பலியாகினர். ஆனால், இந்த சம்பவத்திற்கு மோடி ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல இருந்தார்.
இதனால் அவர் மீது இஸ்லாமியர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். பிரதமராக வர விரும்பும் நரேந்திரமோடி தம்மை இந்திய தேசியவாதி என்று கூறவில்லை. மாறாக இந்து தேசியவாதி என்று சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்டவரை எப்படி பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியும்? என்றார் அவர்.