அமீரக திமுக சார்பில்.. கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வு
அபுதாபி: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று மாலை நடத்தப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக கருணாநிதி இருந்தார். அவரது அரசியல் சாதனைகளை, நலத்திட்டங்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில், ஆண்டு தோறும் அவரது நினைவுநாளை திமுக அனுசரித்து வருகிறது. அந்த வகையில் இன்று 6வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து இந்த அமைதிப் பேரணி தொடங்கியது. முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு அவர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை சென்று இந்த பேரணியானது நிறைவு பெற்றது.

இறுதியாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். கலைஞர் நினைவிடத்தில் மலர்களாலேயே அவரது உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் சிலையையும் காணொலி காட்சி வாயிலாக அவர் திறந்து வைத்தார். சென்னையை போலவே தமிழ்நாடு முழுவதும் இன்று அமைதி பேரணி நடைபெற்றது.
அதேபோல இன்று மாலை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது. அதாவது தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நல வாரியம் சார்பில், அமீரக திமுகவின் அமைப்பாளரான S.S. மீரான் தலைமையில் இந்நிகழ்வு இன்று மாலை 7.30 மணிக்கு துபாயின் தேரா பகுதியில் லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டல், அல்குரையர் சென்டர் அருகில் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications