29 விவசாயிகளிடம் நிலம் கேட்டு மிரட்டிய கர்நாடக பாஜக எம்.எல்.ஏ - விஷம் குடித்த 4 பேர்
பெங்களூரு: அரசு வழங்கிய நிலத்தை கேட்டு பாஜக எம்.எல்.ஏ. மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு அம்மாநில அரசு நிலம் வழங்கி இருக்கிறது. அந்த வகையில் லாமணி என்பவருக்கும் அரசு நிலம் ஒதுக்கி உள்ளது. இந்த நிலத்தின் ஒருபகுதியை மிகக்குறைந்த தொகையில் தங்களுக்கு வழங்குமாறு பாஜக எம்.எல்.ஏ. நேரு ஓலேகர், லாமணியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு லாமணியும் அவரது குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதனால் பாஜக எம்.எல்.ஏ தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் லாமணியையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளனர். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த லாமணி (70), அவரது குடும்பத்தினர் குருசப்பா லாமணி (72), கங்கவ்வா கப்பர் (65), அனுமநாதப்பா (41) ஆகியோருடன் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
4 பேரையும் மீட்ட அப்பகுதி மக்கள் உயர் சிகிச்சைக்காக தாவாங்கரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். கர்நாடகா மாநில அரசின் நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் 29 பேர் ஒரே கிராமத்தில் பயனடைந்து உள்ளனர். இத்திட்டத்தின்மூலம் ஒவ்வொரு நபருக்கும் 0.35 ஏக்கர் நிலம் கிடைத்து இருக்கிறது.
ஆனால், 29 பேரிடமும் பாஜக எம்.எல்.ஏ. நேரு நிலத்தின் ஒரு பகுதியை திருப்பிக்கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் நிலத்தை அளவையிட வந்த அரசு அதிகாரிகளையும் அவர்களின் பணியை செய்ய விடாமல் எம்.எல்.ஏ. தடுத்ததாக மக்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications