நடிகை ரன்யா ராவ்க்கு ஜாமீன் கிடைக்குமா? பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
பெங்களூர்: துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ், ஜாமீன் கேட்டு பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3 ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணம், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கைப்பற்றினர்.

ரன்யா ராவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், சில முக்கிய பிரமுகர்களுக்கும், பெரிய நகைக்கடை அதிபர்களுக்கும் தங்கம் கடத்தி வந்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப்பதிவு செய்து, மும்பை, பெங்களூர் விமான நிலையங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ரன்யா ராவ், ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ரன்யா ராவ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட விஷயத்தில், வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சுங்க சட்டத்தின் பிரிவு 102ஐ பின்பற்றவில்லை. இரவு முழுவதும் துாங்கவிடாமல் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கூறும் வருவாய் புலனாய்வு பிரிவு, மற்ற இருவரை பற்றிய தகவலை ஏன் வழங்கவில்லை? ஜாமீன் கிடைத்த பின், எந்த நேரத்தில் அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராகுவதாக என் மனுதாரர் கூறுகிறார். பெண் என்பதை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அதற்கு, வருவாய் புலனாய்வு பிரிவு வழக்கறிஞர் வைத்த வாதத்தில், மனுதாரர், சுங்க சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரிவு 102ஐ பின்பற்றாவிட்டாலும், குற்றச்சாட்டு நபர்களை தடுத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளது என்று சட்டம் கூறுகிறது. தங்க கடத்தலில் பெரிய வலை அமைப்பு உள்ளது. அதை உடைக்க வேண்டும். விசாரணை தொடர்ந்து நடக்கிறது. மனுதாரருக்கு ஜாமின் கிடைத்தால் வெளிநாடு தப்பிச் செல்லும் வாய்ப்பு உள்ளது. அவர் செய்த குற்றத்தின் தன்மையை பரிசீலிக்க வேண்டும். இந்த வழக்கில் தேச பாதுகாப்பு தொடர்பான விஷயமும் உள்ளது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஸ்வநாத் கவுடர், ஜாமீன் மனு மீது 14 ஆம் தேதி தீர்ப்பு கூறுவதாக அறிவித்தார். அதன்படி, இன்று ரன்யா ராவ் ஜாமின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கர்நாடக அரசு கடந்த 11 ஆம் தேதி, தங்கக் கடத்தல் வழக்கில் ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தையும் போலீஸ் டிஜிபியுமான ராமச்சந்திர ராவை விசாரிக்குமாறு சிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டது. சிஐடி போலீசார், பெங்களூர் விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து, அதன் அடிப்படையில் ராமச்சந்திர ராவை விசாரிக்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கர்நாடக அரசு திடீரென சிஐடி விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications