மொத்தம் 10 லட்சம் நோயாளிகள்.. பெங்களூர் மக்களில் 10ல் ஒருவருக்கு கொரோனா
பெங்களூர்: பெங்களூர் நகரத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 லட்சம் என்ற அளவை நெருங்கிவிட்டது. நகரத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதத்திற்கு சமம் இது.
பெங்களூரில் இதுவரை கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் எண்ணிக்கை, 9.83 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போதைய விகிதத்தில் கேஸ் தொடர்ந்து பதிவானால் இன்று அல்லது நாளை, 10 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டக்கூடும். பெங்களூர் மக்கள் தொகை சுமார் 1 கோடியாகும். எனவே 10 லட்சம் கேஸ்கள் என்றால் நகரில் 10ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அர்த்தம்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை 15,879 கோவிட் கேஸ்கள் பதிவாகியுள்ளன.

சோதனைகள் குறைப்பு
குறைந்த சோதனை காரணமாக கேஸ்கள் குறைந்துள்ளன. 1.05 லட்சம் சோதனைகள் நடத்தப்பட்ட இந்த நகரில் தற்போது 33,000 சோதனைகள்தான் நடத்தப்பட்டுள்ளது. எனவேதான் கேஸ்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பெங்களூர் நிலவரம்
இதுவரை 13.3 லட்சம் கேஸ்களுடன் டெல்லி, பெங்களூரை விட முன்னிலையில் உள்ளது. இறப்புகளைப் பொறுத்தவரை, டெல்லி (19,000), மும்பை (13,000) மற்றும் புனே (10,000) ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக 8,690 இறப்புகளுடன் பெங்களூர் நான்காவது இடத்தில் உள்ளது.

பாசிட்டிவ் ரேட்
அதிக பாசிட்டிவ் ரேட் கவலைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனெனில் அரசு புள்ளி விவரப்படி, பெங்களூரில் 34 சதவீதம் பாசிட்டிவ் ரேட் உள்ளது. அதேபோல இறப்பு விகிதம் 1.21 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இரட்டை உருமாறிய கொரோனா பிரச்சினை
ஒரு சில மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், அதற்கான காரணங்களை கண்டறிந்து வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறினார். பாசிட்டிவ் ரேட்டை 5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். கர்நாடகாவில் இரட்டை உருமாறிய கொரோனா பரவல்தான் அதிக ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது.

கருவிகள்
சோதனையை அதிகரிக்க, கர்நாடக அரசு 37 லட்சம் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கருவிகளை வாங்கும். தற்போது, 10.50 லட்சம் ரேட் கிட்டுகள் கையிருப்பில் உள்ளன, இது ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சுமார் 50,000 கிட்டுகள் வழங்கப்படுகின்றன.

ரெம்டெசிவிர் மருந்து
இதனிடையே, தேவையான ரெம்டெசிவிர் குப்பிகளை வழங்கத் தவறியதற்காக மாநில அரசு ஜூபிலண்ட் லிமிடெட் மற்றும் சிப்லா மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மே 9 ஆம் தேதிக்குள் கர்நாடகாவுக்கு 32,000 ரெம்டெசிவிர் குப்பிகளை வழங்குமாறு ஜூபிலண்டைக் கேட்டுக் கொண்டபோதிலும் அது, இதுவரை, 17,601 குப்பிகளை மட்டுமே வழங்கியது. சிப்லா மே 9 க்குள் 30,000 குப்பிகளை வழங்க வேண்டியதற்கு பதிலாக, 10,840 குப்பிகளைதான் அனுப்பியது.












Click it and Unblock the Notifications