அதிர்ந்த பெங்களூர்.. ஐடி ஊழியர் & மனைவி தூக்கிட்டு தற்கொலை.. குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்த சோகம்!
பெங்களூர்: பெங்களூரில் வாடகை வீட்டில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். ஐடி நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வாடகைக்குத் தங்கி இருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாகவே மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் சிலர் தவறான முடிவை எடுக்கிறார்கள். இதற்கிடையே அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் மீண்டும் பெங்களூரில் நடந்துள்ளது.

4 பேர் சடலமாக மீட்பு:
பெங்களூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனுப் குமார் (38), அவரது மனைவி ராக்கி (35), இந்த தம்பதியின் 5 வயது மகள் அனுப்ரியா மற்றும் 2 வயது மகன் பிரியான்ஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து பெங்களூருக்கு வந்த இந்த குடும்பம் அங்கு வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துத் தங்கியுள்ளது. அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் அனுப் குமார் சாப்ட்வேர் கன்சல்டன்ட்டாக பணியாற்றி வருகிறார்.
என்ன நடந்தது:
இன்று திங்கள்கிழமை காலை வழக்கம் போல வீட்டு வேலை செய்யும் பெண் அவர்கள் வீட்டிற்குப் போய் இருக்கிறார். பல முறை வீட்டின் கதவையும் காலிங் பெல்லையும் அடித்த போதும் கூட யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், அக்கம் பக்கத்தினருக்கு இது தொடர்பாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் அனுப் குமார்- ராக்கி தம்பதி மற்றும் அவர்களது குழந்தைகளின் உடல்கள் அங்கே சடலமாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அனுப் மற்றும் ராக்கி ஆகிய இருவரும் சேர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளனர். அதன் பிறகு இவர்களும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தை:
அனுப் குமார்- ராக்கி முதல் குழந்தை மாற்றுத்திறனாளி என்றும் அவரது உடல்நிலை நினைத்துப் பெற்றோர்கள் அடிக்கடி கவலைப்படுவார்கள் என்றும் வீட்டில் வேலை செய்யும் அந்த பெண் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகனின் உடல்நிலையை நினைத்து கடும் மன அழுத்தத்தில் இருந்த பெற்றோர்கள் இந்த மோசமான முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதேநேரம் சமீப நாட்களில் இந்த தம்பதி மகிழ்ச்சியாக இருந்ததாகவும் புதுச்சேரிக்குச் சுற்றுலா செல்லவும் கூட திட்டமிட்டு இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் இதற்கான பேக்கிங்கை கூட முடித்துள்ளனர். மேலும், தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள தலா ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் 3 பேரை வேலைக்கு நியமித்துள்ளனர்.
போலீஸ் விசாரணை:
இந்தச் சூழலில் அவர்கள் திடீரென தற்கொலை செய்து கொண்டது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் இதுவரை தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இது கொலையா இல்லை தற்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications