"என்னை ஏன் கொடுமை படுத்துறீங்க?" பெங்களூருவில் டிடிஆர் - பெண் பயணி இடையே கடும் வாக்குவாதம்
பெங்களூரு கேஆர் புரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகருக்கும், பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.
பெங்களூரு : பெங்களூரு கேஆர் புரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகருக்கும், பயணிக்கும் இடையே நடந்த கடும் வாக்குவாதம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிளாட்பாரத்தில் நிற்கும் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த அதிகாரி, ஒரு பெண் பயணியின் டிக்கெட்டை கேட்டு மோசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தன்னிடம் மோசமாக பேசியதால், "என்னை ஏன் கொடுமை படுத்துறீங்க? நான் டிக்கெட் புக் பண்ணி தான் வந்தேன். அந்த டிக்கெட்டுல வந்துதான் இங்க இருக்கேன்" என்று மனம் உடைந்தபடி பெண் ஒருவர், எதிரே நின்ற ரயில்வே ஊழியரிடம் கூற, அதற்கு அவர், "காட்டு போ, இது தான் என் வேலை " என்று கத்தினார்.

இதையடுத்து அந்த பெண் மனம் உடைந்து கதறி அழுதார். சுற்றி இருந்த மற்ற பயணிகள் அவருக்காக குரல் கொடுத்தனர். அந்தப் பெண் தனியாகப் பயணம் செய்தார். அவரை டாச்சர் செய்கிறார் என கூறினார்கள்.
டிக்கெட்டை முன்பதிவு செய்தே வந்ததாகவும், அதை வேறு டிக்கெட் பரிசோதகரிடம் காட்டிவிட்டேன் என்றும் அந்த பெண் வீடியோவில் வரும் டிக்கெட் பரிசோதகரிடம் கூறுகிறார். ஆனால் ரயில்வே ஊழியர் அதை ஏற்க மறுத்து திட்டுகிறார். இப்படியாக வீடியோ முடிகிறது. இதனிடையே குடிபோதையில் டிக்கெட் பரிசோதகர் இருந்ததாக மற்ற பயணிகள் குற்றம்சாட்டினர். குடித்துவிட்டு பெண் பயணியிடம் அவர் மோசமாக நடந்து கொண்டதாக சக பயணிகள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து டிக்கெட் பரிசோதகரை தென்மேற்கு ரயில்வே இடைநீக்கம் செய்துள்ளது. அண்மையில் லக்னோவில் குடிபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் பயணியின் தலையில் சிறுநீர் கழித்ததற்காக கைது செய்யப்பட்டார். அந்த பெண் தனது கணவருடன் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த போது இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications