"58 லட்சம் சம்பளம்.. ஆனால் எப்போதும் வாட்டி வதைக்கும் தனிமை.!" பெங்களூர் ஐடி ஊழியரின் கண்ணீர் கடிதம்
பெங்களூர்: ஐடி ஊழியர் ஒருவர் மாதத்திற்குப் பல லட்சம் சம்பளம் வந்தாலும் தான் எப்போதும் தனிமையில் வேதனைப்படுவதாகப் பதிவிட்டுள்ள கடிதம் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
பணம் நிச்சயமாக உங்களுக்கு வசதியான வாழ்க்கை முறையைத் தரும்.. அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதேநேரம் எத்தனை கோடி பணம் இருந்தாலும் அது அன்பான நண்பர்கள், பாசமான குடும்பத்தையும் தரவே தராது.

இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் ஒரு கடிதம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த அந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் தனது தனிமையான வாழ்க்கை குறித்து உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூர் ஊழியர்: அவரது இந்த போஸ்ட் தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. கிரேப்வைன் தளத்தில் தான் அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். 24 வயதான பொறியாளர், பெங்களூரில் உள்ள FAANG என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் ஆண்டுக்கு 58 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. "வாழ்க்கை நிறைவுற்றதாக உணர்கிறேன்" என்ற தலைப்பில் அவர் இந்த கடிதத்தைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2.9 வருடங்களாக வசதியான வாழ்க்கையை வாழ்ந்த போதிலும் அவர் தனிமையில் இருந்ததாக அந்த நபர் கடிதத்தில் எழுதியுள்ளார்.அந்த நபர் தனது கடிதத்தில், "நான் என் வாழ்க்கையில் எப்போதும் தனிமையாக இருக்கிறேன். என்னுடன் நேரத்தைச் செலவிட எனக்கு ஒரு காதலி இல்லை, மேலும் எனது மற்ற நண்பர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வதிலேயே இருக்கிறார்கள்.

சலிப்பானது: எனது வேலை வாழ்க்கை கூட சலிப்பானது தான். ஏனென்றால் நான் வேலை செய்யத் தொடங்கியது முதலே ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்து வருகிறேன்.. ஒவ்வொரு நாளும் நான் ஒரே வேலையைத் தான் திரும்பத் திரும்ப செய்து வருகிறேன். எனது வேலையில் எந்தவொரு புதிய சவால்களும் இல்லை. அதேபோல எனது கேரியரில் இதன் பிறகு வளர்ச்சி இருக்கும் என்றும் நான் கருதவில்லை" என்று அவர் தனது கடித்ததில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இணையத்தில் வேகமாகப் பரவும் இந்த கடிதம் குறித்து பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர், "தற்போதைய ஐடி இன்ஜினியர்கள் என்பது வெறும் கருவிகளாக மாறிவருகின்றனர். இது பலருக்கும் சலிப்பை ஏற்படுத்துகிறது.. ஆண்டுக்கு 58 லட்சம் ஊதியம் பெற்றாலும் அழுத்தம் அதிகமாகவே இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளனர்.
பல வித கருத்துகள்: அதேபோல மற்றொருவர், "பணம் திருப்தியை அளிக்கும், ஆனால் அது மற்ற பல விஷயங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளும். பெரும்பாலான மக்கள் இவற்றை பெரிய பிரச்சினையாகவே கருதுவதில்லை. இதுவே நிலைமையை மேலும் மேலும் மோசமானதாக மாற்றுகிறது" என்று பதிவிட்டுள்ளார். அதேநேரம் இன்னும் சிலர் விமர்சிக்கும் வகையிலும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொருவர் "58 லட்சம் ஊதியம் பெற்று, அதுவும் 24 வயதில் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. போரடிக்கிறது என்று சொன்னால், அவர் சம்பளத்தைக் குறைத்து வாங்கிக் கொள்ளலாம். குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டுவதே வாழ்க்கையை சுவாரசியமானதாக மாற்றிவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications