எருமை மாடுகளை திருடிய வழக்கு.. கர்நாடகாவில் 58 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி காட்டிய முதியவர் கைது
பெங்களூர்: எருமை மாடுகளை திருடிய வழக்கில் 58 ஆண்டுகளுக்கு பிறகு முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நிலுவையில் இருக்கும் பழைய வழக்குகளை விரைந்து முடிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இப்படியாகதான் 58 ஆண்டுகள் பழைய வழக்கில் முதியவர் ஒருவர் சிக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பால்கி மேஹாகர் பகுதியில் மல்லிதர்ராவ் குல்கர்னி எனும் விவசாயி வசித்து வந்திருக்கிறார். இவருக்கு சொந்தமாக சில எருமை மாடுகள் இருந்திருக்கின்றன. இந்நிலையில் கடந்த 1965ம் ஆண்டு இந்த எருமை மாடுகளிலிருந்து இரண்டு மாடுகள் மிஸ்ஸாகியுள்ளன. கூடவே கன்று ஒன்றும் காணாமல் போயுள்ளது.

இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்துார் தகலஹான் கிராமத்தைச் சேர்ந்த கிஷன் சந்தர், கணபதி விட்டல் வாக்மோர் ஆகிய இருவர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். பீதர் மாவட்டம் கர்நாடகாவின் கடைசி மாவட்டமாக இருக்கிறது.
அதாவது இது தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையில் அமைந்திருக்கிறது. எனவே குற்றம் செய்வோர் எளிதாக அண்டை மாநிலங்களுக்கு தப்பிவிடுவார்கள். இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இப்படிதான் எருமை மாடுகள் திருடி வழக்கில் கைதான கிஷன் சந்தர், கணபதி விட்டல் வாக்மோர் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தப்பி ஓடிவிட்டார்கள். அவர்களை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
இதனையடுத்து பீதர் எஸ்.பி., சன்னபசவண்ணா லங்கோடி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். இப்படியாக பழைய வழக்குகளை கிளறிய போலீசார் கிஷன் சந்தர், கணபதி விட்டல் வாக்மோர் இருவரையும் தேட தொடங்கினர். இதில் கிஷண் சந்தர் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. அதேபோல கணபதி விட்டல் வாக்மோர் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.
இவருக்கு தற்போது வயது 78. இந்த குற்ற செயலில் இவர் ஈடுபடும்போது வயது 20. இதனையடுத்து இவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வயது மூப்பு காரணமாக இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இவர் மீதான கண்காணிப்பை போலீசார் அதிகப்படுத்தியுள்ளனர். 58 ஆண்டுகளுக்கு பின்னர் எருமை மாடுகளை திருடிய வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது கர்நாடக மாநிலத்தில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications