ஹிஜாப்புக்கு அனுமதி மறுப்பு: காவிக்கு எதிராக நீல துண்டுடன் களம் வந்த தலித் மாணவர்கள்.. பரபர கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாகத் தலித் மாணவர்களும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
Recommended Video
அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் கல்லூரிக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தங்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம்
கடந்த காலங்களில் ஹிஜாப் அணிந்து வந்த போது யாரும் எதுவும் தெரிவிக்காத நிலையில், இப்போது சிலரது தூண்டுதலால் கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளனர் என்பது மாணவிகளின் வாதமாக உள்ளது. அதேநேரம் கல்லூரிகளில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே யூனிபார்ம் தான் என்றும் மதச் சடங்குகளை மாணவ - மாணவிகள் தங்கள் வீடுகளில் பின்பற்றிக்கொள்ளலாம் என்றும் அம்மாநில அமைச்சர்கள் கூறி வருவது சர்ச்சையைப் பெரிதாக்கியே வருகிறது.

பதற்றம்
ஹிஜாப் அணிந்துள்ளதால் தங்களைக் கல்லூரிகளுக்கு உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் இதனால் கழிப்பறைக்குக் கூட செல்ல முடிவதில்லை என்றும் சில மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகங்களின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இன்று கல்லூரி நிர்வாகங்கள் மாணவிகளை உள்ளே அனுமதித்தது. இருப்பினும், சர்ச்சைக்குரிய வகையில் போராடும் மாணவிகளை மட்டும் தனி அறையில் அமர வைத்து, வகுப்புகளையும் நடத்தவில்லை. இதுபோன்ற செயல்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது.

கல்வி நிறுவனங்கள்
முன்னதாக ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, சில இந்து மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்து போராட்டம் நடத்தினர். கல்லூரியில் அனைவருக்கும் ஒரே யூனிபார்ம் தான் அவர்களை ஹிஜாப் அணிய அனுமதி அளித்தால், எங்களைக் காவி ஷால் அணிந்து வர அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.

தலித் மாணவர்கள்
இதனிடையே முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதை எதிர்த்து கல்லூரிகளில் படிக்கும் இந்து மாணவர்கள் கடந்த சில நாட்களாகத் துண்டு அணிந்து செல்கின்றனர். இந்தச் சூழலில், இஸ்லாமிய மாணவிகள் முன்னெடுத்துள்ள இந்த ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாக அளிக்கும் வகையில் சிக்மங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் தலித் மாணவர்கள் நீல நிற துண்டுகளை அணிந்து இன்று கல்லூரிக்கு வந்தனர்.

ஜெய் ஸ்ரீ ராம் vs ஜெய் பீம்
காவி துண்டு அணிந்த மாணவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். அதற்குப் பதில் தரும் வகையில் மற்றொரு தரப்பு ஜெய் பீம் என்று கோஷம் எழுப்பினர். இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பி வந்ததால், அங்குக் கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் தலையிட்டு மாணவர்களைக் கலைந்து போக வலியுறுத்தினர். அதன் பின்னரே மாணவர்கள் கோஷமிடுவதை நிறுத்தினர்.

கர்நாடக துணை முதல்வர்
கடந்த சில நாட்களாகவே இந்தப் போராட்டம் கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இது குறித்து வரதராஜ் எம் ஷெட்டி அரசு கல்லூரி துணை முதல்வர் உஷா தேவி கூறுகையில், "ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை நாங்கள் வீட்டிற்குத் திரும்பச் செல்லும்படி கூறினோம். ஆனால் அவர்கள் திரும்பிச் செல்லவில்லை. நாளை இது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவின்படியே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் ஒரு சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தது உண்மை தான். அப்போது யாரும் எந்த பிரச்சினையும் எழுப்பவில்லை" என்றார்.

கல்வியாளர்கள் கோரிக்கை
ஹிஜாப் விவகாரம் விஸ்வரும் எடுத்துள்ள நிலையில், இதில் அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். படிக்கும் மாணவர்களைச் சிலர் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகவும் மாணவ - மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு இந்த விவகாரத்தைச் சுமுகமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications