நெருங்கும் தீபாவளி.. பெங்களூரில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் தெரியுமா? மீறினால் அவ்வளவுதான்
பெங்களூர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பெங்களூர் உள்பட கர்நாடகாவில் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி கர்நாடகா மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. மாறாக வடமாநிலங்களில் வரும் 11ம் தேதி முதல் 15ம் வரை கொண்டாடப்பட உள்ளது.

கர்நாடகாவிலும் தீபாவளி 5 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக பெங்களூரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இருப்பதால் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தினங்களில் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளியையொட்டி பொதுமக்கள் அதிகளவில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசடைகிறது. மேலும் பறவைகள், விலங்குகளுக்குக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் தற்போது இந்தியாவில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும் நேரம் என்பது குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் பட்டாசு வெடிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலங்களும் தங்களின் மக்கள் பட்டாசு வெடிப்பதற்கான காலஅளவை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி வரும் தீபாவளி பண்டிகை நாளான நவம்பர் 12ம் தேதி தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தான் கர்நாடகாவில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்த முக்கிய தகவலை கர்நாடகா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் நவம்பர் 11 முதல் நவம்பர் 15ம் தேதி வரை தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அன்றைய தினங்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் முறைப்படி பின்பற்ற வேண்டும். மேலும் இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். வேறு வகை பட்டாசுகளை விற்க அனுமதிக்கும் வகையில் லைசென்ஸ் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications