வேட்டி கட்டிய விவசாயியை மாலுக்குள் விடாத காவலாளி! தந்தை ஆசையை நிறைவேற்ற தவித்த மகன்.. கொந்தளிப்பு
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபல மாலில் மகனுடன் படம் பார்க்க வேட்டி கட்டி சென்ற விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேட்டி கட்டி உள்ளே செல்ல அனுமதியில்லை. பேண்ட் அணிந்து வாருங்கள் என காவலாளி கூறிய நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் பக்கிரப்பா. விவசாயி. இவரது மகன் நாகராஜ். இவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் மகன் நாகராஜை பார்க்க அவரது தந்தை பக்கிரப்பா பெங்களூர் வந்தார். ஹாவேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் பக்கிரப்பாவுக்கு பெங்களூரில் உள்ள மாலில் சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது.
இதுபற்றி அவர் தனது மகன் நாகராஜிடம் கூறியுள்ளார். இதையடுத்து நாகராஜ் தனது தந்தை பக்கிரப்பாவின் ஆசையை நிறைவேற்ற விரும்பினார். இதையடுத்து பெங்களூர் மாகடி மெயின் ரோட்டில் உள்ள ஜிடி வேர்ல்ட் மாலில் அமைந்திருக்கும் திரையரங்கில் திரைப்படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்தார். அதன்பிறகு நேற்று முன்தினம் நாகராஜ் தனது தந்தை பக்கிரப்பாவுடன் மாலுக்கு சென்றார்.
அப்போது மாலில் பணியில் இருந்த காவலாளி பக்கிரப்பாவை தடுத்து நிறுத்தி உள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவர் அணிந்திருந்த உடையாகும். பக்கிரப்பா விவசாயி. அவர் வழக்கம்போல் வேட்டி, சட்டை அணிந்திருந்தார். இதனை பார்த்த காவலாளி வேட்டி அணிந்து மாலுக்குள் செல்ல அனுமதியில்லை. வீட்டுக்கு போய் பேண்ட் அணிந்து வாருங்கள் என்று கூறினார். இதனை கேட்ட நாகராஜ், ‛அப்பாவுக்கு பேண்ட் அணியும் பழக்கம் கிடையாது. அவர் வேட்டி, சட்டை தான் அணிவார். ஏன் இப்படி பேண்ட் அணிய கட்டாயப்படுத்துகிறீர்கள்? திரைப்படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்து தான் வந்துள்ளோம்' என தெரிவித்துள்ளார்.
ஆனால் காவலாளி கேட்கவில்லை. இதனால் நாகராஜ் மற்றும் காவலாளி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த காவலாளிகளின் மேற்பார்வையாளர் அங்கு வந்தார். அவரும், ‛‛பெண்கள் நைட்டி அணிந்து வர தடை உள்ளது. அதேபோல் தான் ஆண்களும் சில ஆடைகளை அணிந்து வந்தால் அனுமதிக்க மாட்டோம்'' எனக்கூறினார். அதன்பிறகு நாகராஜ் நண்பர்களிடம் பேசிய நிலையில் மீடியாக்கள் அங்கு சென்றதால் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி பக்கிரப்பா கூறுகையில், ‛‛நான் நீண்ட தூரம் பயணம் செய்து எனது மகனை பார்க்க வந்தேன். அவர் என்னை திரைப்படம் பார்க்க மாலுக்கு அழைத்து சென்றார். நான் வேட்டி அணிந்து இருந்ததால் காவலாளி என்னை அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டுக்கு செல்வோம் என்று நான் கூறினேன். ஆனால் என் மகன் போராடி உள்ளே அழைத்து சென்றான். என் வாழ்வில் நான் இப்படி ஒரு நிகழ்வை இப்போது தான் பார்க்கிறேன்'' என மனம் வருந்தினார்.

இதற்கிடையே மாலில் நடந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து விவசாய சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் கடும் கோபம் அடைந்தார். ‛‛வேட்டி அணிந்து வந்த விவசாயியை மாலுக்குள் அனுமதிக்காததை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த செயலுக்கு பெரிய அளவில் விவசாயிகளை அழைத்து மால் முன்பு போராட்டம் நடத்துவேன்'' என எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து மாலின் பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த் பக்கிரப்பா - நாகராஜிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அடுத்து நடக்காது என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications