"பயப்படாதீங்க.. விஎச்பி உங்க கூட இருக்கும்.." இந்துத்துவா மாணவர்களிடம் பேசிய 3 பேர்.. லீக்கான வீடியோ
பெங்களூர்: கர்நாடகாவில் இந்துத்துவா மாணவர்களை போராட்டம் செய்ய தூண்டுவது போல 3 பேர் பேசும் வீடியோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கர்நாடகா முழுக்க பல பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய பிரச்சனை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் அங்கு பியு கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக அங்கு இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றன. பல இடங்களில் இந்த போராட்டம் கைமீறி சென்றுள்ளது..

இந்துத்துவா மாணவர்கள்
இந்த நிலையில் இந்துத்துவா மாணவர்களை போராட்டம் செய்ய தூண்டுவது போல 3 பேர் பேசும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்துத்துவா மாணவர்களிடம் எப்படி போராட்டம் செய்ய வேண்டும் என்று 3 நடுத்தர வயது நபர்கள் இந்த வீடியோவில் அறிவுறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அவர்கள் கன்னட மொழியில் பேசி உள்ளனர். அந்த வீடியோவில், நீங்கள் எல்லோரும் நாளை கல்லூரி சென்றதும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள். இதை பற்றி உங்கள் கல்லூரி பிரின்ஸ்பாலிடம் பேசுங்கள்.

போராடுங்கள்
மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் உள்ளே அனுமதிக்க கூடாது என்று சொல்லுங்கள். அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் உடனே ஸ்டிரைக் நடத்துங்கள். நீங்கள் பயப்பட கூடாது. பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உங்களுடன் இருக்கும். ஏற்கனவே வகுப்பறைக்கு யூனிபார்ம்தான் அணிந்து வர வேண்டும் என்று முதல்வரும், உள்துறை அமைச்சரும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இஸ்லாமிய மாணவிகள் அதை பின்பற்றுவது இல்லை.

உங்களுடன் இருக்கிறோம்
நீங்கள் எல்லோரும் சென்று இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி துண்டு உடுத்துவோம் என்று சொல்லுங்கள். எல்லோருக்கும் யுனிபார்ம் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்று களத்தில் இறங்குங்கள்.. பயப்பட வேண்டாம். போராட்டம் நடத்த கூடாது என்று அரசு கேட்டுள்ளது. அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உங்களுடன் இருக்கும் என்று அந்த வீடியோவில் இருக்கும் 3 பேர் இந்துத்துவா மாணவர்களிடம் அறிவுரை வழங்கி உள்ளனர்.
Recommended Video

யார் இவர்கள்?
இந்துத்துவா மாணவர்களிடம் 3 நடுத்தர வயது நபர் இப்படி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதும். அவர்களை போராட்டம் செய்ய தூண்டியதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் இவர்கள்? ஏன் மாணவர்களை இப்படி வழி நடத்துகிறார்கள்? என்று நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பி உள்ளனர். உடுப்பியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதை பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். மாணவர்களை தூண்டி விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நெட்டிசன்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications