ஹாட்ரிக் அடித்த இஸ்ரோ.. புஷ்பக் ஏவுகணை சோதனை வெற்றி.. விண்வெளியில் இனி அடுத்த டார்கெட் இதுதான்
பெங்களூர்: விண்வெளியில் செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில், RLV Pushpak என்ற ராக்கெட்டை ஏற்கனவே இரண்டு முறை இஸ்ரோ சோதனை செய்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை மூன்றாம் கட்ட சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளி துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு நிகராக இந்தியாவும் சாதித்து வருகிறது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, இந்தியாவின் விண்வெளி கனவை நனவாக்கி வருகிறது. உலகில் எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் ரோவரை தரையிறக்கி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

இஸ்ரோ: இந்திய செயற்கை கோள்கள் மட்டும் இன்றி வெளிநாடுகளின் செயற்கை கோள்களையும் விண்ணில் ஏவி வருகிறது. வரும் காலத்தில் கூடுதலாக செயற்கை கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. விண்வெளிதுறையில் இந்தியா மிகவும் வெற்றிகரமான நாடாக உள்ளதால், வெளிநாடுகளும் இஸ்ரோவை நாடி வருகின்றன.
இந்த நிலையில், தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆர்எல்வி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கடந்த 2016-ம் ஆண்டில் ஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் முதல் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஹெக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பி சாதனை படைத்தது.
சோதனை முயற்சி வெற்றி: இந்த நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில், RLV Pushpak என்ற ராக்கெட்டை பரிசோதித்து வருகிறது. இந்த ராக்கெட் ஏற்கெனவே இரண்டு முறை சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மூன்றாம் கட்ட சோதனை இன்று காலை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் சித்ரதுர்க்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் இன்று காலை 7.10 மணியளவில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. புஷ்பக் ராக்கெட்டின் மூன்று கட்ட சோதனைகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில், விண்வெளித்துறையில் அடுத்த கட்ட உச்சத்தை இஸ்ரோ எட்டியுள்ளது.
ஜப்பானுக்கு அடுத்தபடியாக: தற்போது இஸ்ரோ தனது ராக்கெட்டுகளை ஜிஎஸ்எல்வி பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்து வருகிறது. இந்த ராக்கெட்டுகள் குறிப்பிட்ட உயரத்திற்கு சென்ற பிறகு ஒவ்வொரு பாகமாக கடலில் விழுந்துவிடும். ஆனால், தற்போதைய இந்த புஷ்பக் ராக்கெட் சோதனை என்பது செயற்கை கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி விடும்.
பூமியில் இருந்து 4.2 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக இன்று பூமிக்கு வந்தது. மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் தரையிறங்கிய ராக்கெட்டின் வேகம் படிப்படியாக பாரசூட் மூலமாக குறைக்கப்பட்டு நிறுத்தப்படும். நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்த தொழில் நுட்பத்தை கொண்ட நாடாக இந்தியாவும் மாறியுள்ளது.
மிகப்பெரிய திருப்புமுனை: இந்த ராக்கெட்டுகளை பயன்படுத்தி செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவது பொருளாதார ரீதியாகவும் இஸ்ரோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது சோதனை முடிவு வெற்றி பெற்றுள்ளதால் இனி விண்வெளியில் இந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு பூமியில் பத்திரமாக தரையிறக்கப்படும். இது மிகப்பெரிய திருப்புமுனை டெக்னலாஜி என்றும் விண்வெளி துறையில் செலவுகள் இந்த ராக்கெட் மூலமாக கணிசமாக குறையும் என்றும் இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications