அப்பா மகன்தான் காரணம்.. கர்நாடகா இடைத்தேர்தல் தோல்வி.. எடியூரப்பாவை வெளுத்து வாங்கிய பாஜக எம்பி
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் நிலவும் உள்கட்சி பிரச்சினையே தோல்விக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜக எம்பி ஒருவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது மகனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் மற்றும் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் கேரளா, கர்நாடகா, சிக்கிம், மேகாலயா, சத்தீஷ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், பீஹார், உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் மகாராஷ்டிராவை தவிர மற்ற பகுதிகளில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

ஜார்க்கண்ட் மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கர்நாடகா மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு அப்செட் கொடுத்திருக்கிறது. அதிலும் கர்நாடகா மாநில இடைத்தேர்தல் தோல்வி பாஜகவின் உள்கட்சி பிரச்சினையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. சன்னபட்னா தொகுதி, சந்தூர் தொகுதி, ஷிக்கான் தொகுதி ஆகிய மூன்றிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அங்கு பாஜக தோல்வியடைந்துள்ளது. அதிலும் சன்னபட்னா தொகுதியில் முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான குமாரசாமியின் மகன் நிகில் காங்கிரஸ் வேட்பாளர் யோகேஷ்வரிடம் தோல்வியை தழுவியுள்ளார்.
ஷிக்கான் தொகுதியில் முன்னாள் முதல்வரும், எம்பியுமான பசுவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மையை காங்கிரஸ் வேட்பாளர் யாசின் அகமது கானிடம் தோல்வியடைந்துள்ளார். ஷிக்கான் தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக தான் வெற்றி பெற்று வந்தது. அங்கு தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
சந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹனுமந்தா, காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணாவிடம் தோல்வியடைந்தார். பல சீனியர் தலைவர்களின் மகன்களே தேர்தலில் தோல்வியடைந்திருப்பது பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கர்நாடகா பாஜகவில் தலைவிரித்தாடும் உள்கட்சி பிரச்சினையே தோல்விக்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பாஜக எம்பி பசன்கௌடா பாட்டீல் யத்னல் கூறுகையில், "கர்நாடகாவில் பாஜக இப்படி படு தோல்வியை சந்திக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. கட்சியில் உள்ள பலரும் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான சூழல் வைத்திருப்பதும் தோல்விக்கு காரணமாக உள்ளது.
இந்த மாநிலத்தின் பொறுப்பாளராக அருண் சிங் இருக்கிறார். அவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆட்டுவிக்கும் கருவியாக மட்டுமே உள்ளார். எடியூரப்பா மற்றும் அவரின் மகன் விஜயேந்திராவின் மெசேஞ்சராக அருண் சிங் செயல்படுகிறார். விஜயேந்திரா கொண்டு வந்த எதையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாஜக தேசிய தலைமை கர்நாடகாவுக்கான வியூகத்தை மாற்ற வேண்டும். மாநில பொறுப்பாளர் என்ற பதவிக்கான மதிப்பு தெரிந்த நேர்மையானவர்களை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும். அதைவிடுத்து தந்தை மகனை மட்டுமே (எடியூரப்பா, விஜயேந்திராவின்) மையமாக வைத்து இயங்க கூடாது.
உள்கட்சி பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும். அப்போதுதான் கர்நாடகாவில் பாஜக வெற்றிப் பாதைக்கு திரும்பும். இந்த தேர்தல் முடிவுகளை தலைமை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார். பசன்கௌடாவின் இந்தக் கருத்து கர்நாடகா பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications