"கூட்டாட்சி" தத்துவத்தை மதிக்காத மத்திய பாஜக அரசு- சுதந்திர தின விழாவில் சித்தராமையா சரமாரி தாக்கு!
பெங்களூர்: நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மதிப்பதே இல்லை என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடுமையாக தாக்கி உள்ளார். மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் நிதி பெறுவதற்கு கூட நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலைமை இருப்பதாக கர்நாடகாவில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா சாடியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா இன்று தேசியக் கொடியேற்றினார். அப்போது முதல்வர் சித்தராமையா பேசியதாவது: எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் கர்நாடகா அரசு செயல்படுத்தி வரும் 5 உத்தரவாத திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். சமூக நீதி, பொருளாதார சமத்துவத்தின் மூலமாக தேசத்தின் வளர்ச்சிக்கான கர்நாடகா மாடல் அரசு தொடர்ந்து செயல்படும்.

இந்தியா என்பது உன்னதமான கலாசாரத்தைக் கொண்டது; பல்லாயிரம் மொழிகள் பேசக் கூடிய நிலம்; பல நூறு மதங்களைக் கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமையை கடைபிடிக்கக் கூடியது. ஆகையால் யாரும் யாருக்கும் நல்லிணக்கம் குறித்து எல்லாம் பாடம் எடுக்க தேவையும் இல்லை. இதைத்தான் நாம் பல்லாண்டுகாலமாகவும் கடைபிடித்து வருகிறோம்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர், பெண்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக நாம் பாடுபடுகிறோம். ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கல்விதான் மிக முக்கியமானது என்பதை வலியுறுத்துகிறோம்.
அரசியல் சாசனம்தான் நமக்கான வழிகாட்டி. இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்கள்தான். சுதந்திர தினம் என்பது கொண்டாட்டத்துக்குரியது மட்டுமல்ல; நமது கடமைகளையும் நினைவூட்டக் கூடியது.

மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவம் என்ற கோட்பாட்டில் இருந்து விலகிச் செல்கிறது; கூட்டாட்சித் தத்துவத்தையே மத்திய அரசு மதிக்கவும் இல்லை. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாரபட்சம் காட்டுகிறது. மாநிலங்களின் வளர்ச்சியால்தான் ஒட்டுமொத்த தேசமும் வளர்ச்சியடைய முடியும். ஆகையால் மாநிலங்களின் வளர்ச்சிக்கான உரிய நிதியை பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதற்காக மாநில அரசுகள் நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமைதான் இருக்கிறது.
ஜனநாயகக் கட்டமைப்பில் எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அரசியல் சாசனத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும். மக்கள் அளித்திருக்கும் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் நடக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.












Click it and Unblock the Notifications