ஆபாச வீடியோ மிரட்டலுக்கு பின்.. நடிகர் சுதீப்புக்கு இன்னொரு சிக்கல்!தேர்தல் ஆணையத்தில் பரபர புகார்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் நடிகர் சுதீப் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் அவரது ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டல் கடிதம் எழுதப்பட்ட நிலையில் தற்போது அவர் இன்னொரு சிக்கலை எதிர்கொண்டுள்ளார். அதாவது சுதீப் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கையானது மே 13ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே தேர்தல் முடிவு வெளியாக உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது நடிகர், நடிகைகள் தங்களின் நட்பு, பழக்கம் வழக்கம் மற்றும் உறவினர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது வழக்கமான ஒன்றாகும். இதனால் நடிகர், நடிகைகளை கட்சியினர் தங்களின் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வகையில் அழைப்பு விடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சுதீப் பேட்டி: குறிப்பாக இந்த ஆண்டு முதலே நடிகர் சுதீப் குறித்த செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பின. அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக நடிகை ரம்யா மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரை அவர் சந்தித்து பேசியதால் இந்த தகவல் அதிக முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில் தான் நடிகர் சுதீப் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
முதல்வருக்கு ஆதரவு: இந்த பிரஸ்மீட்டில் நடிகர் சுதீப், ‛‛ நான் எனது ஆதரவை முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு வழங்குகிறேன். அவர் கூறும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்ய உள்ளேன். எனது கஷ்ட காலத்தில் அவர் பக்கபலமாக இருந்தார். நான் பாஜகவில் இணையவில்லை. மேலும் எந்த தொகுதியிலும் போட்டியிட மாட்டேன்'' என்றார். இதன்மூலம் நடிகர் சுதீப் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
ஆபாச வீடியோ மிரட்டல்: இதற்கிடையே தான் நடிகர் சுதீப்பின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி அவரது முகவரிக்கு 2 கடிதம் எழுதியிருப்பது தெரியவந்தது. பாஜகவில் சேர்ந்தால் ஆபாச வீடியோ வலைதளங்களில் வெளியிடுவோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான நடிகர் சுதீப் சார்பில் பெங்களூர் புட்டேனஹள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.

புதிய சிக்கல்: இதன் தொடர்ச்சியாக தான் தற்போது நடிகர் சுதீப் புதிய சிக்கலை எதிர்கொண்டுள்ளார். அதாவது சுதீப்புக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவமொக்காவை சேர்ந்த வழக்கறிஞரான கேபி ஸ்ரீபால் என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தடை விதிக்கணும்: இந்த கடிதத்தில், ‛‛கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் நடித்த படங்களை திரையரங்கு மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதோடு, விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இதனையும் தேர்தல் முடியும் வரை ஒளிபரப்பாமல் இருக்க உத்தரவிட வேண்டும். பாஜகவுக்கு பிரசாரம் செய்வதாக அவர் அறிவித்துள்ளதால் அவரது படம், நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் வாக்காளர்களிடம் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் விரைந்து முடிவு எடுத்து அவரது திரைப்படம், நிகழ்ச்சி, விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications