ஒருவழியா முடிஞ்சுது! இன்று முதற்கட்ட வேட்பாளர்களை வெளியிடுகிறது பாஜக.. எகிறும் எதிர்பார்ப்புகள்
பெங்களூரு: அடுத்த மாதம் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். இந்த மாநிலத்தில் கடைசியாக நடைபெற்ற 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அடுத்த 14 மாதங்களில் பாஜக இந்த ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதனால் அப்செட் அடைந்த காங்கிரஸ் 2024 தேர்தலில் எப்படியாவது பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வந்தது.

மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் இருக்கின்றன. இதில் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு ஏற்கனவே காங்கிரஸ் தயாராகி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதமே தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துவிட்டது. அதேபோல கடந்த மார்ச் மாதம் 124 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் கடந்த 7ம் தேதி 42 அடங்கிய வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டது.
ஆனால் தேர்தல் நெருங்குவதற்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பாஜக ஒரேயொரு வேட்பாளர்களை கூட இன்னும் அறிவிக்கவில்லை. ஏற்கனவே ஆட்சியை கலைத்தது, ராகுல் காந்தி மீதான தகுதி நீக்க நடவடிக்கை, மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் மக்கள் மத்தயில் ஏற்பட்டுள்ள சலிப்பு ஆகியவை பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கிறது. அதபோல சமீபத்தில் வெளிவந்த கருத்து கணிப்புகளும் காங்கிரஸுக்கு ஆதரவாகவே இருந்தன. எனவே இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பாஜக கையை பிசைந்துக்கொண்டிருந்தது.
இது ஒருபுறம் எனில் மறுபுறம் தொகுதிகளுக்காக பாஜகவின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் தங்களுக்குள் போட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றனர். குறிப்பிட்ட 40 தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராக நிற்க 4-5 பேர் தயார் நிலையில் உள்ளனர். இதில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மற்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு போய்விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கோகாக் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ரமேஷ் ஜார்கிஹோலி தனது ஆதரவாளர்களுக்காக காக்வாட், அதானி மற்றும் பெல்காம் புறநகர் என மூன்று தொகுதிகளை கேட்டிருக்கிறார். இவர்தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக அதிகாரத்தை கைப்பற்ற காரணமாக இருந்த முக்கிய நபர். எனவே இவரது கோரிக்கையை கட்சியால் நிராகரிக்க முடியவில்லை. மறுபுறம் ஏற்றுக்கொண்டாலும் சீனியர்கள் கொந்தளிக்க தொடங்குகின்றனர். எனவே என்ன செய்வது என்று கட்சி திகைத்து நின்றிருந்தது.
இதனையடுத்து நேற்று பிரதமர் மோடி, நட்டா உள்ளிட்ட தேசிய தலைமையை சந்தித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான மாநில தலைமை குழு 120-150 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்டபாளர்களை இறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பட்டியல் அநேகமாக இன்று அல்லது நாளைக்குள் வெளியாகலாம் என கட்சியின் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்திருக்கிறார்.
ஓய்வு பெறுவதாக அறிவித்த எடியூரப்பா, எஸ்.ஏ.ரவீந்திரநாத், ஹாலடி ஸ்ரீனிவாஸ் ஷெட்டி, ஊழல் புகாரில் சிக்கிய மதல் விருபாக்ஷப்பா, நேரு ஓலேகர் ஆகியோர் தவிர தற்போது அதிகாரத்தில் இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்கள் ஒரு சிலருக்கு சீட் மறுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை குஜராத் பாணியில் சிட்டிங் எம்எல்ஏ அனைவருக்கும் சீட் மறுக்கப்படலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. எப்படி இருப்பினும் வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர்தான் உண்மை தெரிய வரும்.












Click it and Unblock the Notifications