‛வொர்க் ஆகாத பொத்தான்’.. டென்ஷனான சித்தராமையா.. பரிதாபத்தில் மின்வாரிய நிர்வாக இயக்குனர்.. போச்சே
பெங்களூர்: காவிரி ஆற்றில் இருந்து 150 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கும்போது அழுத்த வேண்டிய பொத்தான் வேலை செய்யாததால் கர்நாடகா முதல்வர் சித்தராமையா டென்ஷன் ஆனார். இதன் தொடர்ச்சியாக கர்நாடகா அரசு போட்ட உத்தரவால் செஸ்காம் மின்வாரிய நிர்வாக இயக்குனர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் செயல்பட்டு வருகின்றனர்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் சித்தராமையா, டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக தேர்தல் சமயத்தில் அவர்கள் வழங்கிய 5 முக்கிய வாக்குறுதிகளை செயல்பாட்டுக்கு கொண்டுள்ளனர்.
மேலும் மாநிலத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களையும் காங்கிரஸ் பக்கம் இழுக்க தேவையான முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் காவிரி ஆற்றில் இருந்து 150 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடு சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூர் மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகா முத்தின முலுசோகே கிராமத்தில் நடந்து வந்தது. அந்த கிராமத்தின் வழியாக ஓடும் காவிரி ஆற்றில் இருந்து 150 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க நேற்று சித்தராமையா சென்றார். அப்போது காவிரி ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் திறக்கும் வகையில் அங்கிருந்த பொத்தானை அவர் அழுத்தினார். அப்போது தண்ணீர் என்பது ஏரிகளுக்கான கால்வாயில் பாயவில்லை.
அப்போது தான் அந்த பொத்தான் ‛வொர்க்' ஆகவில்லை என்பதும், அந்த பொத்தானுக்கான மின்இணைப்பு சரியாக செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் அதனை சரிசெய்ய முயன்றனர். அப்போது சித்தராமையாக கடும் கோபம் அடைந்தார். மேலும் செஸ்காம் மின்வாரிய நிர்வாக இயக்குனர் ஸ்ரீதரை அழைத்தார்.
அப்போது அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது தெரியவந்தது. இதனால் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். இத்தகைய சூழலில் தான் கர்நாடகா அரசு ‛செஸ்காம்' நிர்வாக இயக்குனரை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இருந்தது மற்றும் பணியில் அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications