‛அடித்து விரட்டுங்க’.. பெங்களூரில் தமிழில் சர்ச்சையாக பேசிய பாஜக அமைச்சர் முனிரத்னா..லீக்கான வீடியோ
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நியைில் தான் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்எல்ஏவும், அமைச்சருமான முனிரத்னா தமிழில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. இதன் தொடர்ச்சியாக அமைச்சர் முனிரத்னா மீது பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 13ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் வெளியாக உள்ளது. ஏப்ரல் 13ம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்கி ஏப்ரல் 20ம் தேதி நடக்கும். ஏப்ரல் 21ல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் நிலையில் மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தான் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

பாஜக அமைச்சர் முனிரத்னா
இந்நிலையில் தான் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக முனிரத்னா உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்து எம்எல்ஏவாக உள்ளார். அதாவது கடந்த 2018 தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியில் 15க்கும் அதிகமானவர்கள் பாஜகவுக்கு தாவியபோது முனிரத்னாவும் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறினார். இதையடுத்து 2019ல் நடந்த இடைத்தேர்தலில் தேர்தலில் பாஜக சார்பில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவான தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் தோட்டக்கலை மற்றும் திட்டமிடல் திட்டம் கண்காணிப்பு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக உள்ளார்.

தமிழில் பேசிய முனிரத்னா
இந்நிலையில் தான் மீண்டும் இந்த தொகுதியில் பாஜக சார்பில் முனிரத்னா தான் போட்டியிட உள்ளார். இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் முனிரத்னா தொகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை உள்பட கட்சி பணிகளை துவங்கி உள்ளார். பெங்களூரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அந்த வகையில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் தமிழர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இந்நிலையில் தான் ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஜாலஹள்ளி வார்டில் காதா நகரில் நடந்த நிகழ்ச்சியில் முனிரத்னா தமிழில் பேசினார்.

சர்ச்சை பேச்சு
தமிழில் பேசும் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அப்போது, ‛‛எங்கடா போனீங்க 4 வருஷமா என கேளுங்கள்.. யாராவது உள்ளே வந்தால் துரத்தி அடிக்க வேண்டும். மிச்சத்தை நான் பார்த்து கொள்கிறேன். எப்படி அடிக்க வேண்டும் தெரியுமா? திரும்பி பார்க்காமல் ஓடும்படி அடிக்க வேண்டும். நாளை நமது தான். நாளைக்கு ஓட்டு போடுறீங்க தானே அதுதான் நாளை நமது'' என்றார். மேலும் இந்த வேளையில் அவர் ஆபாச வார்த்தை ஒன்றையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

வெளியான வீடியோ
இதற்கிடையே இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் ஒவ்வொருவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். முனிரத்னா எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியினரை அடித்து விரட்ட கூறியதாகவும், கலவரத்தை தூண்ட அவர் முயற்சிப்பதாகவும் சிலர் குற்றம்சாட்டினர். மாறாக கன்னட மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முனிரத்னா எம்எல்ஏ பேசியதாகவும் சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு
இது ஒருபுறம் இருக்க ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குசுமா முனிரத்னா மீது பரபரப்பான குற்றம்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக குசுமா தனது ட்விட்டர் பக்கத்தில் முனிரத்னா பேசிய வீடியோவை பகிர்ந்து ‛‛ஜாலஹள்ளி வார்டு காதா நகருக்கு யாரும் வந்தால் அடித்து அனுப்புங்க என கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக எம்எல்ஏ முனிரத்னா பேசியுள்ளார். கர்நாடகாவில் இருந்து கொண்டு கன்னடா மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களிடையே தமிழில் பேசி வெறுப்புணர்வை தூண்டி அடித்து விரட்டுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என பேசி இருக்கிறார். திடீரென ஒருவர் கொல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.

போலீஸ் கமிஷனரிடம் புகார்
மேலும் இதுதொடர்பாக ராஜராஜேஸ்வரி நகர் காங்கிரஸ் வேட்பாளர் குசுமா பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் முனிரத்னா எம்எல்ஏவுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட அவர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications