முதலில் கேரளா.. இப்போது கர்நாடகா.. திடீரென எகிறும் கொரோனா.. அரசு எடுத்த அதிரடி முடிவு! அடுத்து என்ன
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கே டெஸ்டிங்கை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா ருத்திர தாண்டவம் ஆடியது.

வேக்சின் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. பொதுமக்கள் இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பிய நிலையில், இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு: இதற்கிடையே கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 34 பேருக்கு புதிய ஜேஎன் 1 கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது கர்நாடகாவில் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. மற்றொரு தென்மாநிலமான கேரளாவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், இப்போது கர்நாடகாவிலும் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பது பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய முடிவு: நேற்று 34 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களில் 20 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ஆகும். கர்நாடக மாநிலத்தில் உள்ள கொரோனா பரவல் குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாநிலத்தில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் கொரோனா அதிகரிக்க புதிய ஜேஎன்1 வகை கொரோனா தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கொரோனா அதிகரித்தாலும் கூட நாம் கவலைப்படத் தேவையில்லை என்றும் வைரஸ் பரவல் கட்டுக்குள் தான் இருப்பதாகவும் வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அதிகரிக்கும் கொரோனா: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. நாடு முழுக்க ஒரே நாளில் 412 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல ஆக்டிவ் கேஸ்கள் என்று பார்க்கும் போது இந்தியா முழுக்க 4170 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல கர்நாடகாவில் 436 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் தேவையில்லை என்ற மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், அதேநேரம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் வரும் காலத்தில் சோதனையை அதிகப்படுத்த உள்ளோம். சோதனை அதிகரிக்கும் போது நிச்சயம் கொரோனா பாதிப்பும் அதிகரிக்கும்.
கட்டுப்பாடு தேவையில்லை: ஆனாலும், இப்போது கட்டுப்பாடுகள் எதுவும் தேவையில்லை. அதேநேரம் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. கவனமாக இருங்கள். வெளியே செல்லும் போது முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிய வேண்டும்" என்றார்.
பொதுவாக கார்த்திகை மாதம் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் செல்வார்கள். அவர்களுக்கு எதாவது தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த தினேஷ் குண்டு ராவ், "தற்போது மக்கள் நடமாட்டம் மற்றும் கூடுவதற்குத் தடை எதுவும் இல்லை.. இப்போது மக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டோம். ஏனென்றால் அத்தகைய சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications