கர்நாடகா சிஎம் பதவி: 'ஒக்கலிகா' ஜாதி மடாதிபதி பற்ற வைத்த நெருப்பு.. சித்தராமையா கோஷ்டி கொந்தளிப்பு!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் பதவியை துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் சித்தராமையா விட்டுத் தர வேன்டும் என அவரது முன்னிலையிலேயே ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமி வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா அரசின் கன்னட மொழி வளர்ச்சித் துறை சார்பில் பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடாவின் 515-வது ஜெயந்தி விழா பெங்களூரில் நடைபெற்றது. இதில் ஒக்கலிகா ஜாதியைச் சேர்ந்த மடாதிபதிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முதல்வர் பதவி டிகே சிவகுமாருக்குதான்..: இந்நிகழ்ச்சியில் பேசிய ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமி, முதல்வர் சித்தராமையா முதல்வர் பதவியை ஏற்கனவே அனுபவித்தவர். ஆகையால் இனி டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டும். அப்படி செய்வதுதான் சித்தராமையாவுக்கும் நல்லது. முதல்வர் பதவியை டிகே சிவகுமார் அனுபவிக்கவில்லை. அதனால்தான் டிகே சிவகுமாருக்கு முதல்வர் பதவியை தர வேண்டும் என்கிறோம் என்றார்.
அதெப்படி சித்தராமையா முதல்வராக முடியும்?: இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமி, காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இது டிகே சிவகுமாரின் உழைப்பால்தான் சாத்தியமானது. டிகே சிவகுமார்தான் பணமும் செலவு செய்து மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தவர். ஆனால் எதுவுமே செய்யாத சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு இதுபற்றி விரிவாகவும் நான் பேசவிரும்பவில்லை என்றார்.
சித்தராமையா கருத்து: ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் இந்த பேச்சு குறித்து முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சித்தராமையா, முதல்வர் பதவி குறித்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடம்தான் முடிவெடுக்கும் என்றார். ஆனால் துணை முதல்வர் டிகே சிவகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சித்து அணி கொந்தளிப்பு: ஒக்கலிகா மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் இந்தப் பேச்சுக்கு சித்தாராமையா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகா அமைச்சர் ராஜண்ணா இது குறித்து கூறுகையில், மடாதிபதி சந்திரசேகர சுவாமி காவி உடை அணிவதை நிறுத்திவிடட்டும். நான் காவி உடை உடுத்தவும் தயார். ஆனால் மடாதிபதி சந்திரசேகர சுவாமி காவி உடை அணிவதை நிறுத்தப் போவது இல்லை. அதேபோல முதல்வர் பதவியை சித்தராமையா விட்டுத்தரவும் மாட்டார் என்றார்.
துணை முதல்வர்கள்; கர்நாடகா காங்கிரஸில் கூடுதலாக துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்கிற குரல்கள் ஏற்கனவே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பின்னணி என்ன?: கர்நாடகாவில் ஒக்கலிகா கவுடா, லிங்காயத் ஆகியவை பெரும்பான்மை ஜாதிகள். டிகே சிவகுமார் ஒக்கலிகா கவுடா ஜாதியைச் சேர்ந்தவர். முதல்வர் சித்தராமையா குருபா ஜாதியைச் சேர்ந்தவர். கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் ஒக்கலிகா ஜாதியினர் காங்கிரஸ் கட்சிக்கு முழுமையாக வாக்களித்தனர். இதனால் ஒக்கலிகா ஜாதி வாக்குகளை மட்டுமே நம்பி இருந்த ஜேடிஎஸ் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அப்போதே டிகே சிவகுமாருக்குதான் முதல்வர் பதவி என வலியுறுத்தப்பட்டது. டிகே சிவகுமாரும் டெல்லி சென்று முட்டி மோதிப் பார்த்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதல்வராக்கியது. டிகே சிவகுமாரின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் மடாதிபதி சந்திரசேகர சுவாமியின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications