பாறையில் நின்று நீர் வீழ்ச்சியை ரசித்த இளைஞர்.. திடீரென கால் தவறி அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம், பத்ராவதியில் அரசினங்குடி நீர்வீழ்ச்சியில் 23 வயது இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது அரசினங்குடி நீர் வீழ்ச்சி. இது ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள நீர் வீழ்ச்சியில் தண்ணீர் நிறைய வழிந்தோடுகிறது.
இங்கு சுற்றுலாவுக்காக சரத்குமாரும் அவருடைய நண்பர் குருராஜும் பத்ராவதியிலிருந்து வந்தனர். அவர்கள் 6 கி.மீட்டருக்கு தூரத்திலேயே இறங்கி மலையேற்றம் செய்தனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் இந்த பகுதியில் மலையேற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இவர்கள் இருவரும் வனத்துறையினரின் முன் அனுமதியை பெறாமல் மலையேற்றம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சரத்குமார் ஒரு பாறையில் நின்று கொண்டு இயற்கை அழகை கண்டு களித்தார். அதை குருராஜ் பின்புறம் இருந்து கொண்டு வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தலையை கோதியபடியே நீரை ரசித்துக் கொண்டிருந்த சரத்குமார் அந்த பாறையிலிருந்து வழுக்கி ஓடும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதையடுத்து குருராஜ் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சரத்குமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தகவல் அறிந்த சரத்குமாரின் உறவினர்கள் கொல்லூர் வந்துள்ளனர். கொல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சரத்குமார் நின்று கொண்டிருந்த பாறையில் நிறைய பாசிகள் படிந்துள்ளதாம். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தென்னிந்தியாவில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், கபினி அணை உள்ளிட்டவற்றில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அருவிகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications