"நோ சான்ஸ்!" ஹிஜாப் அணிந்து வந்த +2 மாணவிகள்.. இறுதி தேர்வு எழுத அனுமதி மறுத்த பள்ளி நிர்வாகம்
பெங்களூர்: கர்நாடகாவில் இப்போது +2 இறுதி தேர்வு தொடங்கி உள்ள நிலையில், ஹிஜாப் விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் அடுத்தடுத்து சர்ச்சை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஹலால் கறி விவகாரம் சமீபத்தில் தான், அங்கு விஸ்வரும் எடுத்து இருந்தது.
அதேபோல இந்து கோயிலுக்கு முன்பு இருந்த இஸ்லாமியர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இப்படி அடுத்தடுத்து அங்கு நடக்கும் சம்பவம் ஒருவித பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.

கர்நாடகா
கர்நாடகாவில் சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் விவகாரம் பேசுபொருள் ஆனது யாரும் மறந்து இருக்க முடியாது. அங்கு முதலில் அங்குள்ள சில பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. அப்படியே அந்தத் தடை அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. இதை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். ஹிஜாப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கல்லூரிகளிலேயே போராட்டம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

+2 இறுதி தேர்வு
இது தொடர்பாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகள் சார்பில் கர்நாடக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு இப்போது மீண்டும் ஹிஜாப் விவகாரம் பேசுபொருள் ஆகி உள்ளது. இந்த ஹிஜாப் விவகாரத்தில் முதலில் வழக்கு தொடர்ந்து இரு மாணவிகள் இன்று +2 இறுதி தேர்வை எழுத உடுப்பியில் உள்ள வித்யோதயா கல்லூரி மையத்திற்குச் சென்று இருந்தனர்.

அனுமதிக்கவில்லை
ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அலியா அசாதி மற்றும் ரேஷாம் ஆகிய மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக இரு மாணவிகளும் தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் முதல்வரிடம் 45 நிமிடங்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், நீதிமன்ற உத்தரவில் விதிவிலக்கு எதுவும் அளிக்க முடியாது என்று பள்ளி நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர், இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், மாணவிகள் தேர்வு வளாகத்தைவிட்டுக் கிளம்பினர்

பியு தேர்வு
கர்நாடகா பியு பல்கலைக்கழக வாரியம் இன்று நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநில கல்வித் துறையின் தகவலின்படி, மொத்தம் 6,84,255 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், தேர்வு மையங்களைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. ஆடைக் கட்டுப்பாட்டுத் தொடர்பாக மாணவர்கள் எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கர்நாடக கல்வித் துறை அமைச்சர்
முன்னதாக, ஹிஜாப் அணிந்து வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை மாநில கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இறுதிப் பரீட்சையின் போது, ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு பல முஸ்லிம் மாணவிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் மாநில கல்வி அமைச்சர் நாகேஷ் இந்த பதிலை அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications