காலையில் டிஃபன் செய்ய லேட் ஆனதால் தாயை அடித்துக் கொன்ற மகன்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்!
பெங்களூர்: காலை உணவு சமைத்துக் கொடுக்க தாமதமானதால், மகன் இரும்புக் கம்பியால் அடித்து தனது தாயைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில், 17 வயது சிறுவன் ஒருவன் கே.ஆர்.புரம் காவல் நிலையத்திற்கு வந்து நான் எனது அம்மாவை கொலை செய்து விட்டேன் என கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்தச் சிறுவன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அந்தச் சிறுவனின் தாயார் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அதிர்ந்து போய், என்ன நடந்தது என சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அவன் சொன்னதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.
தான் காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தபோது தனது தாய் காலை உணவு தயாரிக்க லேட் ஆனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த இரும்பு கம்பியால் அம்மாவின் தலையில் அடித்தேன் என கூறியுள்ளான் அந்தச் சிறுவன்.
முதலில் மயங்கிவிட்டார் என நினைத்ததாகவும், எவ்வளவு முயன்று எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். சாப்பாடு செய்ய லேட் ஆனதால், பெற்ற மகனே தனது தாயை கொன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
40 வயதான தாயை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சிறுவன், டிப்ளமோ படித்து வருவதாகவும், அவரது சகோதரி, ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தாயை கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications