"இந்தியா கூட்டணி.." அணிவகுக்கும் எதிர்க்கட்சிகள்.. தமிழ்நாட்டில் நடக்க போகும் கூட்டம்.. எப்போது!
பெங்களூர்: இன்று பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் இந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் இப்போதே ஆரம்பித்துவிட்டது. பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கான முன்னெடுப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எடுத்திருந்தார். அதன்படி முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
இந்தச் சூழலில் 2ஆவது கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் இந்தக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இதில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. முதலில் நடந்த கூட்டத்தைக் காட்டிலும் அதிகப்படியான கட்சிகள், அதாவது மொத்தம் 26 எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன. இது தேசியளவில் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் 26 கட்சிகளைக் கொண்ட இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குப் பெயர் இறுதி செய்யப்பட்டது. அதன்படி இந்தக் கூட்டணிக்கு I-N-D-I-A என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தக் கூட்டணிக்கு I.N.D.I.A- Indian National Developmental Inclusive Alliance இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி இதற்கிடையே இப்போது பெங்களூரில் இரண்டாவது கூட்டம் நடந்துள்ள நிலையில், அடுத்து வரும் கூட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி மும்பையில் எதிர்க்கட்சி தலைவர்கள் 3-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் 4-வது ஆலோசனைக் கூட்டமும் மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் 5-வது ஆலோசனைக் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் பேசிய கார்கே, காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியே எதிர்பார்க்காது என்று கூறினார். மேலும், பாஜகவை வீழ்த்துவதே இலக்கு என்றும் இதற்காக அனைத்து கட்சிகள் உடனும் காங்கிரஸ் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.மாநில அளவில் கூட்டணிகளை அமைக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
தொடர்ந்து இறுதியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பேசினர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தை நடத்திக் கொடுத்ததற்குக் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிக்க மம்தா, இந்தியக் கூட்டணியை எதிர்கொள்ள பாஜகவால் முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை குடும்பத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்பதாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, "ஆமாம்.. ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களுக்கு குடும்பம் தான்.. அதற்காகவே போராடுகிறோம்" என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணியில் இப்போது வரை 24 முக்கிய எதிர்க்கட்சிகள் உள்ளன. வரும் காலத்தில் இதில் மேலும் சில கட்சிகள் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications