எங்க மாநிலத்துக்குள் வந்து, என்கிட்டையே விசாரணையா.. தமிழக போலீஸால் கடுப்பான கர்நாடக உள்துறை அமைச்சர்
பெங்களூர்: கர்நாடக எல்லைப் பகுதிக்குள் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடமே தெரியாத்தனமாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர் தமிழக போலீசார், என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
உள்துறை அமைச்சர்தான், காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடியவர். எனவேதான், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் முதல்வர்கள் அந்த துறையை தங்கள் வசம் வைத்திருப்பார்கள்.
கர்நாடகாவில் உள்துறை அமைச்சராக பசவராஜ் பொம்மை பதவி வகித்து வருகிறார். முதல்வர் எடியூரப்பாவுக்கு இவர், நெருக்கமானவர், மற்றும் அம்மாநில பாஜக மூத்த தலைவரும் ஆகும்.

அமைச்சர் ஆய்வு
லாக் டவுன் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சூழ்நிலையில், மக்கள் அதை ஒழுங்காக கடை பிடிக்கிறார்களா, காவல்துறை எந்த அளவுக்கு மக்களிடம் கேள்விகள் கேட்டு வாகனங்களை தடுத்து நிறுத்துகிறார்கள் என்பது போன்றவற்றையெல்லாம் நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்த பசவராஜ் பொம்மை, பெங்களூரின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று விசிட் செய்துள்ளார்.

தமிழக-கர்நாடக எல்லை
இப்படித்தான் பெங்களூரை அடுத்த கர்நாடக-தமிழக எல்லைப்பகுதியான அத்திபெலே என்ற பகுதிக்கு அவர் சென்றார். இரு மாநில எல்லை பகுதி என்பதால் அங்கு ஒரு பக்கம் தமிழக போலீசாரும், இன்னொரு பக்கம் கர்நாடக காவல்துறையும் தடுப்புகளை அமைத்து வாகனங்களை பரிசோதனை செய்ததோடு ஓட்டுனர்களிடம் உரிய ஆவணங்கள் போன்றவை இருக்கிறதா என்பதை விசாரித்துக் கொண்டிருந்தனர்.

விசாரித்த தமிழக போலீஸ்
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. பாசவராஜ் பொம்மை நேரடியாக நடந்துகொண்டே ஒவ்வொரு வாகனங்களை பார்த்துக் கொண்டு சென்றார். அப்போது எதிர்முனையில் நின்று கொண்டிருந்த தமிழக போலீசார், அவரிடம், நீங்கள் யார்? எதற்காக செல்கிறீர்கள்? ஆவணங்களை கொடுங்கள் என்று சரமாரியாக கேட்க ஆரம்பித்துள்ளனர். இதை பார்த்ததும், பின்னால் வந்து கொண்டிருந்த கர்நாடக அதிகாரிகள் பதறியடித்து ஓடிவந்து, "இவர் கர்நாடக உள்துறை அமைச்சர்" என்று சொல்லியுள்ளனர். இதைக் கேட்ட தமிழக போலீசார் ஷாக்காகி விட்டனராம்.

டோஸ் விட்ட அமைச்சர்
தமிழக போலீஸ் மட்டுமல்ல.. பசவராஜ் பொம்மை கூட ஒரு நிமிடம் ஷாக் ஆகி விட்டார். ஏன் என்றால், அப்போதுதான் அவர் ஒரு விஷயத்தை கவனித்துள்ளார். தமிழக போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய இடம் கர்நாடக மாநில எல்லை பகுதிக்குள் அமைந்துள்ளதாம். இதை கவனித்ததும், உடனடியாக பெங்களூரு ஊரக போலீஸ் எஸ்பிஐ தொடர்புகொண்டு, "தமிழக போலீசார் நமது மாநில எல்லைக்குள் வந்து தடுப்புகளை அமைத்துள்ளனர்.. நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்" என்று டோஸ் விட்டுள்ளார். உடனடியாக தமிழக போலீசாரை இங்கிருந்து வெளியேற்றச் செய்யவேண்டும் என்றும் அவர் கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.

நிழலுக்காக நகர்ந்த போலீஸ்
இதையடுத்து, கர்நாடக காவல்துறையினர், தமிழக காவல் துறையினருடன் பேசி, அவர்களை அங்கே இருந்து தமிழக எல்லைக்குள் போகச் செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது.. தமிழக எல்லைப்பகுதியில் போதிய நிழல் இல்லாத காரணத்தால், கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிழல் இருக்கக்கூடிய கர்நாடக பகுதிக்குள் தமிழக போலீசார் வந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. எனவே வாகன சோதனையில் ஈடுபடக்கூடிய போலீசாருக்கு உரிய அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும், அல்லது இது, இரு மாநில பிரச்சனையாக கூட மாறிவிடும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
|
வேட்டி, சட்டை கிடையாது
கர்நாடக எல்லைக்குள் தமிழக காவல்துறையினர் சோதனை நடத்தியதை, கவனித்தது, அவர்களை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டது குறித்து, பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். நம்மூர் அரசியல்வாதி மாதிரி கர்நாடக அரசியல்வாதிகள் வேட்டி, சட்டை அணிந்து வலம் வருவதில்லை. இன்று விசிட் செய்தபோது, பசவராஜ் பொம்மை, சஃபாரி மாதிரியிலான ஆடைதான் அணிந்திருந்தார். இதை பார்த்துதான், தமிழக போலீஸ் இன்னும் குழம்பிவிட்டது என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications