அநியாயம்..அங்கன்வாடி குழந்தைகளின் தட்டில்வைத்த முட்டை..போட்டோ எடுத்ததும் தூக்கிய ஊழியர்கள் சஸ்பெண்ட்
பெங்களூர்: குண்டூரில் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையை தட்டில் வைத்து போட்டோ எடுத்த பின்னர் முட்டையை தட்டில் இருந்து எடுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இரண்டு அங்கன்வாடி ஊழியர்களையும் சஸ்பெண்ட் செய்து மகளிர் மற்றும் குழ்தைகள் நலத் துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. கர்நாடக மாநிலத்திலும் மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு முட்டைகளைப் பரிமாறிவிட்டு, பின்னர் ஊழியர்களே அதை எடுத்துச் சென்ற வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம், குண்டூர் கிராமத்தில் உள்ள ஓர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு முட்டையுடன் பரிமாறப்பட்டுள்ளது. இதனை அங்கன்வாடி ஊழியர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். அப்போது, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பே தட்டில் இருந்த முட்டைகளை அங்கிருந்த ஊழியர்கள் வேகவேகமாய் எடுக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர், தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த துறையை அடிமட்டத்தில் இருந்து உயர்த்த போராடி வருகிறேன். தரமான கல்வி, சத்தான உணவு வழங்குவதே அங்கன்வாடிகளின் பிரதான நோக்கம். ஏழைக் குழந்தைகளுக்கு அநியாயம் நடக்க விட மாட்டோம் என்று கூறியுள்ளார்.
கர்நாடக அங்கன்வாடி மையங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதல்முறை இல்லை. பல அங்கன்வாடிகள் மையங்களில் பதிவேட்டில் உள்ள குழந்தைகளைத் தவிர பிற குழந்தைகள் கணக்கில் காட்டப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பல மையங்களில் கழிப்பறைகள், அடிப்படை வசதிகள், பள்ளிகளில் கதவுகள் உள்ளிட்டவை இல்லாதது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வருவது கர்நாடக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications