உடல் முழுதும் தங்கம்.. சுங்கத்துறையை அதிரவைத்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி.. பெங்களூரில் ஷாக்
பெங்களூர்: துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் 3.44 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியை சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவர் தனது சட்டைக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தபோது அதிகாரிகளிடம் சிக்கினார்.
சென்னை, பெங்களூர் உள்பட நம்நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இப்படி வருவோர் வெளிநாடுகளில் விலை குறைவு என்று அங்கிருந்து தங்கம் வாங்கி கடத்தி வருகின்றனர்.

இவர்களில் பலர் விமான நிலையங்களில் சிக்கி விடுகின்றனர். சிலர் எஸ்கேப்பாகி விடுகின்றனர். சமீபத்தில் கூட தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‛வாகா' திரைப்படத்தில் நடித்த ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்து அதிகாரிகளிடம் சிக்கினார்.
துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ் பெங்களூர் விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகளிடம் சிக்கினார். ரன்யா ராவிடம் இருந்து மொத்தம் 14.2 கிலோ தங்கம் பிடிபட்டது. இதன் மதிப்பு ரூ.12.56 கோடியாகும். ரன்யா ராவின் வளர்ப்பு அப்பா கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். டிஜிபியாக பணியாற்றி வரும் நிலையில் ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பேசுப்பொருளாகி உள்ளது.
இப்படியான சூழலில் தான் தற்போது பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ரன்யா ராவ் தங்கம் கடத்தி சிக்கிய அதேநாளில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரும் தங்கம் கடத்தி வந்துள்ளார். கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியும் துபாயில் இருந்து விமானத்தில் பெங்களூர் வந்து இறங்கினார்.
அப்போது அவர் அணிந்திருந்த உடையில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் தனது சட்டைக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 3.995 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு என்பது ரூ.3.44 கோடியாகும்.
மேலும் கண்பார்வையற்ற மாற்றுத்ததிறனாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதால் அதிகாரிகளிடம் எளிதாக தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில் அவர் தங்கம் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவருக்கு பின்னால் இருக்கும் கும்பல் பற்றி அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications