சபாநாயகருக்கு லஞ்சம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன்.. எடியூரப்பா சவால்
பெங்களூர்: சபாநாயகருக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டை நிரூபித்தால், அரசியலில் இருந்தே விலகி விடுவதாக கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு, பாஜக தலைவர் எடியூரப்பா சவால் விடுத்துள்ளார்.
கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு, எடியூரப்பா ரூ.50 கோடி லஞ்சம் தந்து ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக குமாரசாமி இன்று காலை நிருபர்கள் முன்னிலையில் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு ஆதாரமாக ஒரு ஆடியோவையும் அவர் வெளியிட்டார்.
இதுபற்றி எடியூரப்பா உடனடியாக நிருபர்களிடம் மறுப்பு தெரிவித்து பேட்டியளித்தார். அவர் கூறுகையில், நான் மஜதவின் எந்த எம்எல்ஏவையும் சந்திக்கவில்லை. ஒரு நல்ல நாடகத்தை குமாரசாமி நடத்தி வருகிறார். மக்களின் மதிப்பை இந்த கூட்டணி அரசு இழந்துவிட்டதால், பாஜக மீது பழியை போட பார்க்கிறார்கள்.
ஆட்சியை கலைக்க சபாநாயகருக்கு பாஜக ரூ.50 கோடி லஞ்சம்.. ஆடியோ வெளியிட்டு குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு
நான் பேசியதாக கூறி வெளியிட்ட ஆடியோ போலியானது. இக்காலத்தில் யார் குரலை வேண்டுமானாலும் இவ்வாறு ஆடியோவாக மாற்றி வெளியிட முடியும்.
நான் சபாநாயகருக்கு ரூ.50 கோடி வழங்கிய குற்றச்சாட்டை குமாரசாமி நிரூபித்துவிட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் நான் அரசியலை விட்டே விலகிவிடுவேன். எம்எல்ஏ பதவியை உடனே ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன். இது 101% உறுதி. சினிமா தயாரிப்பாளரான குமாரசாமியிடம் இதுபோன்ற ஜோடிப்பு கதைகள் நிறைய உள்ளன. இதுபோன்று கதைகட்டுவதில் குமாரசாமி வித்தகர். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது என பாஜக குற்றம்சாட்டி வருகிறது. 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென மும்பை ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்த நிலையில்தான் இதுபோன்ற குற்றச்சாட்டும், மறுப்பும் வெளியாகியுள்ளது.