"ரிஸ்க்கே இல்லை.." மிடில் கிளாஸ் மக்களுக்கு அதிக லாபத்தை அள்ளி தரும் 5 சிறுசேமிப்பு திட்டங்கள்!
சென்னை: இந்த காலத்தில் நாம் பணத்தை சரியான முறையில் சேமித்தால் மட்டுமே ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். இதனால் நாம் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அப்படி மிடில் கிளாஸ் மக்களுக்கு நல்ல லாபம் தரும் 5 முக்கியமான சேமிப்பு திட்டங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
பணத்தை சேமிக்கும் பலரும் வங்கியில் தான் பணத்தை சேமிப்பார்கள். ஆனால், வங்கியில் மிகவும் குறைவான வட்டியே கிடைக்கும். விலைவாசி உயர்வுடன் ஒப்பிடும் போது பெரிய லாபம் கிடைக்காது.

ஆனால் வங்கியில் கிடைக்கும் வட்டியை விட அதிக வட்டியை அள்ளி தரும் சிறுசேமிப்பு திட்டங்கள் நிறைய உள்ளது. அவை குறித்து நாம் பார்க்கலாம்.
என்எஸ்சி திட்டம்: முதலில் National Savings Certificate எனப்படும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (VIII) திட்டமாகும். இந்த தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்சம் நாம் ரூ.1,000 முதலீடு செய்தால் போதும். 1,000ல் தொடங்கி, நீங்கள் எவ்வளவு தொகை வேண்டும் என்றாலும் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இந்த தேசிய சேமிப்புச் சான்றிதழில் உங்களுக்கு ஆண்டுக்கு 7.7% வட்டி கிடைக்கும்.
பிபிஎஃப்: அடுத்து முக்கியமானது Public Provident Fund அதாவது பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதியாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 7.1% வட்டி கிடைக்கும். மேலும், இதில் முதலீடு செய்வோர் வரி சலுகைகளையும் பெறலாம். ரூ.500இல் தொடங்கி இதில் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். சிப் முறையிலும் இதில் முதலீடு செய்யலாம், லம்ப்சம் எனப்படும் ஒரே நேரத்திலும் முதலீடு செய்யலாம்.
கேவிபி: KVP எனப்படும் கிசான் விகாஸ் பத்ரா என்பது குறைந்த ஆபத்துள்ள முதலீடு ஆகும்.. இது நமக்கு நிலையான வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஆண்டுக்கு இதில் நமக்கு 7.5% வட்டி கிடைக்கும். அதன்படி பார்த்தோம் என்றால் நாம் முதலீடு செய்யும் தொகை 115 மாதங்களில் (9 ஆண்டுகள் & 7 மாதங்கள்) இரட்டிப்பாகும். இதில் குறைந்தபட்சம் ரூ. 1000ஐ முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு என எதுவும் இல்லை.
எம்எஸ்எஸ்சி: அடுத்து MSSC எனப்படும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) திட்டம் இருக்கிறது. இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான அரசின் இரண்டு வருட சேமிப்புத் திட்டமாகும். இதில் நமக்கு ஆண்டுக்கு 7.5% வட்டி கிடைக்கும். பெண்கள் மட்டுமே இதில் முதலீடு செய்ய முடியும். மைனர் பெண் குழந்தை என்றால் பெற்றோர் கணக்கு தொடங்கலாம். இதில் குறைந்தபட்சம் ரூ. 1000ல் தொடங்கி ரூ. 2 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
எஸ்எஸ்ஏசி: சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம்.. இதுவும் முக்கியமான சேமிப்பு திட்டமாகும். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சத் தொகை ரூ. 250இல் இருந்து அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். சிப் முறையில் முதலீடு செய்ய முடியாது. லம்ப்சம் முறையிலேயே முதலீடு செய்ய வேண்டும். ஒரு நிதியாண்டில் எத்தனை முறை முதலீடு செய்யலாம் என்பதிலும் வரம்பு இல்லை.
21 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இந்தத் திட்டத்திலும் 10 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை வைத்திருப்போர் மட்டுமே கணக்கை தொடங்க முடியும். இதில் நமக்கு அதிகபட்சமாக 8.2% வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்யும் தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும், முதிர்வு காலம் 21 ஆண்டுகள் என்றாலும் கூட, பெண் குழந்தைகள் 18 வயதாகும் போது முதலீடு செய்த தொகையில் 50% தொகையை எடுக்கலாம்.












Click it and Unblock the Notifications