ஜிஎஸ்டி: வணிகர்களே... உங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு வணிகவரித்துறையில் பதிவு பெற்ற வணிகர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு வணிகவரித்துறையில் பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும் ஜிஎஸ்டி இணைய தளத்தில் தங்களது டிஜிட்டல் கையெப்ப சான்றிதழ் அல்லது ஆதார் எண் உதவியுடன் மின் கையொப்பமிட்டு தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி ஜூலை 1 முதல் அமலாக உள்ளது. இது தொடர்பாக வணிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விரைவில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியைச் சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் ஜிஎஸ்டி தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (டின்) பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் தாங்களாகவே இந்த இணைய தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
4.1.2017 முதல் இப்பதிவை மேற்கொள்ளும் வசதி செய்யப்பட்டது. இந்த இணையதளத்தில் பதிவு செய்ய தற்காலிக ஐடி மற்றும் பாஸ்வேர்டு வணிகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிகவரித்துறை இணையதளம் https://ctd.tn.gov.in மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
வணிகர்கள் இந்த தற்காலிக ஐடி மற்றும் பாஸ்வேர்டுடன் இணையதளத்தை உபயோகப்படுத்தி இந்தப் பதிவை மேற்கொண்டு வருகிறார்கள். ஜிஎஸ்டி பதிவு செய்யும் இணையதளம் தற்காலிகமாக 1.5.2017 முதல் 31.5.2017 வரை நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் 1.6.2017 முதல் திறக்கப்படும். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு அனைத்து பதிவு பெற்ற வணிகர்களும் ஜிஎஸ்டி இணையதளத்தில் இணையும் வசதி, நாடு முழுவதும் 15.6.2017 அன்று முடிவடையவுள்ளது.
தமிழ்நாடு வணிகவரித்துறையில் பதிவு பெற்ற வணிகர்கள் அனைவரும் ஜிஎஸ்டி இணைய தளத்தில் தங்களது டிஜிட்டல் கையெப்ப சான்றிதழ் அல்லது ஆதார் எண் உதவியுடன் மின் கையொப்பமிட்டு தங்களின் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கெனவே ஜிஎஸ்டி இணைய தளத்தில் விவரங்கள் பதிவு செய்த பெரும்பாலான வணிகர்கள் மேற்கூறப்பட்ட டிஜிட்டல் கையெப்ப சான்றிதழ் / மின்கையொப்பத்துடன் பதிவு செய்யவில்லை. எனவே, அனைத்து வணிகர்களும் உடனடியாக ஜிஎஸ்டி இணையதளத்தில் தங்களின் விவரங்களை டிஜிட்டல் கையெப்ப சான்றிதழ் / மின்கையொப்பத்துடன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications