பெட்ரோல் ரூ 25-க்கும், டீசல் ரூ 17-க்கும் விற்கலாம்... ஆனால் கொள்ளையைத் தொடர்கிறது அரசு!
ஒரு அரசாங்கமே மக்களை மிகப் பெரிய மோசடி செய்வதை இந்தியாவில்தான் பார்க்க முடிகிறது.
குறிப்பாக பெட்ரோலியப் பொருட்கள் விற்பனையில் மக்களை வரலாறு காணாத வகையில் சுரண்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இன்றைக்கு கச்சா எண்ணையின் விலை மேலும் சரிந்து 31 டாலருக்கு வந்துவிட்டது. ஆனால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலை மட்டும் குறைந்தபாடில்லை.
கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் உயர்ந்தால் கூட, பெரும் கூப்பாடு போட்டுக் கொண்டு இரவோடு இரவாக ஒரு கொள்ளைக்காரனை விட மோசமாக விலையை ஏற்றி பாக்கெட்டைப் பறிக்கும் இந்த அரசு, கச்சா எண்ணெய் விலை படு பாதாளத்தில் விழுந்தும் கூட கண்டு கொள்ளாமல் கொள்ளையைத் தொடர்கிறது.
சமீபத்தில் அமெரிக்காவின் சில நகரங்களுக்குச் சென்றிருந்தபோது பெட்ரோல் விலை அதிகபட்சம் ஒரு காலனுக்கு (3.75 லிட்டர்) அதிகபட்சம் 2 டாலர்கள் வரை விற்கப்பட்டதைக் காண முடிந்தது. அதாவது ஒரு லிட்டர் விலை ரூ 37.33 (கலிபோர்னியாவில்).
அதுவே டெக்சாஸ் மாகாண நகரங்களில் 1.39 டாலர். டல்லாஸ், ஆஸ்டின், ஹூஸ்டன் போன்ற நகரங்களில் ஓரிரு சென்ட்கள்தான் வித்தியாசம் (பெட்ரோல் நிலையத்துக்கேற்ப). இங்கு பெட்ரோல் ஒரு லிட்டர் விலை 26 ரூபாய்!
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் என்பவரோ, தான் அதிபரானால் 50 சென்டுக்கு பெட்ரோல் தரப் போவதாக வாக்களித்திருக்கிறார். அதாவது லிட்டர் ரூ 10-க்கு!
இந்தியாவில் இன்றைய தேதிக்கு அனைத்து வரிகளையுமே சேர்த்து ரூ 25-க்கு பெட்ரோலையும், ரூ 17-க்கு டீசலையும் விற்றால் கூட எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாபம், அரசுகளுக்கும் நல்ல லாபத்துடன் வருமானம் கிடைக்க வாய்ப்பிருந்தும், கண்மூடித்தனமாக Hyper Price என்பார்களே, அந்த உச்சபட்ச விலையை நிர்ணயித்து மக்களின் வருமானத்தை உறிஞ்சுகின்றன எண்ணெய் நிறுவனங்களும் அரசுகளும்.
உலகில் வளர்ந்து வரும் சின்னச் சின்ன நாடுகளில் கூட பெட்ரோலியப் பொருட்களின் விலை இன்றைக்கு இந்த அளவு அதிகமாக இல்லை என்பதே உண்மை.
பெட்ரோலியப் பொருள் விற்பனை என்ற பெயரில் இந்தியாவில் நடக்கும் கொள்ளை பற்றி இம்மியும் யாரும் கவலை கொள்ளவில்லை. மக்களும் மரத்துப் போய் அதிக விலை கொடுத்து வாங்கப் பழகிவிட்டனர்.
என்னென்னவோ வாக்குறுதிகளை அள்ளிவிடும் கட்சிகள் கூட, இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் கொள்ளையின் கூட்டாளிகளாக நிற்கிறார்கள்.
ஊழலை ஒழிப்போம் என்ற மாஸ்கை மாட்டிக் கொண்டு அலையும் எவருக்கும், பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை குறித்து அரசிடம் ஒரு வெள்ளை அறிக்கைக் கேட்கக் கூட துப்பில்லை!
குறிப்பு: அமெரிக்காவின் டல்லாஸ் நகர பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் எடுத்த படம் இது. அங்கு பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்!
இரண்டாவது படம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் கடந்த 48 மணி நேரத்தில் பெட்ரோல் விற்பனையான விலை.
குறிப்பு 2: ஜூலை 3, 2008-ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலர். இதுதான் இதுவரை உச்ச விலை. அந்த தேதிக்கு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 55.07. டீசல் விலை ரூ 37.13!