துபாயில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 5% வரி - இந்தியர்கள் தங்கம் வாங்குவதும் குறைந்தது
துபாயில் இறக்குமதி தங்க நகைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து துபாயில் விற்பதற்காக நகைகளை அனுப்பும் வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
துபாய்: இந்தியாவில் இருந்து துபாய் செல்பவர்களில் பலர், அங்கிருந்து தங்கம் வாங்கி வர விரும்புகின்றனர். இந்தியாவை விட துபாயில் தங்கம் விலை குறைவு என்பதே இதற்கு காரணம். இந்தியாவின் உயர்பணமதிப்பு நீக்க அறிவிப்பினால் கடந்த 2 மாதங்களாக துபாய் நாட்டின் தங்கச் சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைவேலைப்பாடுகள் நிறைந்த நகைகளுக்கு துபாயில் வரவேற்பு உண்டு. இந்தியாவில் தயாரிக்கப்படும் நுணுக்கமான வேலைப்பாடுகள் மிகுந்த தங்க நகைகள் 45 முதல் 50 சதவிகிதம் வரை துபாய்க்கு ஏற்றுமதியாகின்றன.

இறக்குமதி நகைகளுக்கு வரி
இந்த நிலையில் துபாயில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 5 சதவிகித வரி போடப்பட்டுள்ளது. தற்போது துபாய் விதித்துள்ள இறக்குமதி வரியால் இந்திய நகை ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது சில நகை வர்த்தகர்களின் கருத்து.

பாதிப்பு யாருக்கு?
அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து துபாயில் விற்பதற்காக அனுப்பும் நகைகளுக்குதான் இந்த வரி. பெரும்பாலான இந்திய நகைகள் துபாய் வழியாக வேறு நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு பாதிப்பு இல்லை என்று சில நகை ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.

மணப்பெண் நகைகள்
இந்தியாவில் இருந்து துபாய்க்கு சுற்றுலா செல்பவர்கள் 10 சதவீத சுங்கவரி இல்லாமலேயே வாங்கி வரலாம். இதுபோல் மொத்தம் சுமார் 4,000 கோடி ரூபாய் முதல் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான மணப்பெண்களுக்கான தங்க நகைகளை இந்தியர்கள் கடந்த காலங்களில் வாங்கி வந்துள்ளதாக நகை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

உயர்பணமதிப்பு நீக்கம்
அதே நேரத்தில் இந்தியாவின் உயர்பணமதிப்பு நீக்க அறிவிப்பினால் துபாய் நாட்டின் தங்கச் சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்ப் நியூஸ் இதழ் கூறியுள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதியன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்த பின்னர் அவற்றை பலரும் தங்கமாக மாற்றினர். இதனையடுத்து அரசு எடுத்த நடவடிக்கையினால் நகைக்கடைகளில் செல்லாத ரூபாய் நோட்டுக்களுக்கு நகைகள் விற்பனை செய்யப்படவில்லை.

குறைந்த நகை விற்பனை
துபாய் செல்லும் இந்தியர்கள் தங்களின் கைகளில் கொண்டு செல்லும் பணத்தை திர்ஹாம் கரன்சியாக மாற்றி நகைகளாக வாங்குவார்கள். நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின்னர் துபாய் தங்க சந்தைகளில் வழக்கமாக நடைபெற்று வந்த வர்த்தகத்தை விட வெகுவாக நகை விற்பனை குறைந்து விட்டதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications