குறுகிய கால வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை- ரகுராம் ராஜனின் கடைசி நிதி கொள்கை அறிவிப்பு
டெல்லி: ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டிவிகிதம் எந்த மாற்றமும் இன்றி, 6.5 சதவிகிதம் என்ற தற்போதைய அளவிலேயே தொடரும் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் உள்ள ரகுராம் ராஜனின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், அவரது பதவிக்காலத்தின் இறுதியாக, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான இடைக்கால நிதிக்கொள்கை இன்று அறிவிக்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தனது கடைசி நிதிக்கொள்கை அறிவிப்பை செய்தியாளர்களிடையே வெளியிட்ட ரகுராம் ராஜன், ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டிவிகிதம் எந்த மாற்றமும் இன்றி, 6.5% என்ற தற்போதைய அளவிலேயே தொடரும் என தெரிவித்தார்.

சில்லரை பணவீக்கம்
இதேபோன்று, சிஆர்ஆர் எனப்படும் ரொக்கக் கையிருப்பு விகிதமும் மாற்றம் ஏதுமின்றி, 4% என்ற அளவில் தொடர்வதாகக் கூறப்பட்டுள்ளது. தற்சமயம், சில்லறை பணவீக்கம் 5.77% ஆக உள்ளது. இதனை 4% வரை குறைக்க, இலக்கு நிர்ணயித்து ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருகிறது. எனவே, வட்டிவிகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று, ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

வட்டிவிகிதம் மாற்றம் இல்லை
கடந்த 2013ம் ஆண்டில் அவர் பதவியேற்றது முதலாக, 2014 டிசம்பர் வரை குறுகிய கால கடனுக்கான வட்டிவிகிதத்தில் அவர் எந்த மாற்றமும் செய்யவில்லை.

வட்டி விகிதக் குறைப்பு
இதன்பின்னர், உள்நாட்டில் பணவீக்கம் குறைந்து, சர்வதேச அளவிலும் சாதகமான பொருளாதார காரணிகள் ஏற்பட்ட நிலையில், 2015 ஜனவரி முதல், அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ச்சியாக, வட்டிவிகிதக் குறைப்பை அமல்படுத்தினார்.

குறுகிய கால கடன்கள்
இதுவரை 1.50% வரை குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதத்தைக் குறைத்துள்ளார். எனினும், கடந்த சில மாதங்களாக, வட்டிவிகிதத்தில் உயர்வோ, குறைப்போ எதையும் அமல்படுத்தாமல், இருக்கும் அளவிலேயே அதனை நீட்டித்து வந்துள்ளார்.

வளர்ச்சியை எட்டும்
எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு, குறுகிய கால கடனுக்கான வட்டிவிகிதத்தில் மாற்றம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், 2017ம் ஆண்டுக்குள் இந்தியப் பொருளாதாரம் 7.6% என்ற வளர்ச்சியை எட்டும் என்றும் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டி உள்ளார்.

செப்டம்பரில் ஓய்வு
ஜிஎஸ்டி., மசோதா, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் மாதத்துடன் இவர் ஓய்வு பெற உள்ளார்.












Click it and Unblock the Notifications