பாஜகவைவிட மொத்தமே 0.85% ஓட்டு மட்டும் கம்மியாக வாங்கியும் கோட்டைவிட்ட காங்கிரஸ்! ஹரியானா கதை
சண்டிகர்: ஹரியானாவில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. ஹரியானாவில் நேற்று நடந்த சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே கிட்டத்தட்ட ஒரே அளவு வாக்கு சதவீதம் பெற்றுள்ளன. ஆனால், பாஜக 48 தொகுதிகளில் வென்றுள்ளது, காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. வெறும் 0.85% ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் கனவு பறிபோயுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

வாக்கு எண்ணிக்கை: அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை ஆரம்ப நிலவரத்தின்படி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது. 9 மணியளவில், காங்கிரஸ் கட்சி 70க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்தது. அப்போது பாஜக 9 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது.
ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் எனத் தெரிவித்த நிலையில், தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்தது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தலைகீழாக மாறிய ஆட்டம்: ஆனால், அடுத்த சில நிமிடங்களில் எல்லாமே தலைகீழாக மாறியது. 9.30 மணி அளவில் காங்கிரஸுக்கு இணையாக பாஜகவும் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது. அதன் பிறகு அப்படியே களம் மாறியது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக 48 தொகுதிகளில் வென்றுள்ளது.

இதன் மூலம் ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 3வது முறையாக தொடர்ந்து ஹரியானாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக. கடந்த தேர்தலில் பாஜக அங்கு 40 சீட்களில் வென்று சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்திருந்த நிலையில் தற்போது மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைக்க உள்ளது.
வாக்கு சதவீதம்: இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுமே கிட்டத்தட்ட சம அளவு வாக்குகளைப் பெற்றுள்ளன. பாஜக 39.94% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 39.09% வாக்குகளையும் பெற்றுள்ளன. இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 0.85% தான். ஆனால், சீட் அடிப்படையில் பார்த்தால் 9 தொகுதிகள் பாஜகவை விட காங்கிரஸ் குறைவு.
காங்கிரஸ் நம்பிக்கை தகர்ந்தது: பாஜக 48 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்துள்ளது. பல தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருந்தது. உச்சன கலன் தொகுதியில் வெறும் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பாஜக வேட்பாளர்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானாவின் 10 மக்களவைத் தொகுதிகளை பாஜகவும் காங்கிரஸும் 5 - 5 என சமமாக பகிர்ந்துகொண்டன. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் ஆட்சியைக் கைப்பற்றும் நம்பிக்கையோடு இருந்தது காங்கிரஸ். எக்சிட் போல் கணிப்புகளும் அதையே கூறியிருந்தன. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸின் நம்பிக்கை தகர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications